குழந்தைகளின் உடலில் தீக்காயம்

தெலங்கானா மாநிலம் சூர்யபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் நகிரிகாந்தி ரவி. லாரி ஓட்டுநராக பணியாற்றி வரும் இவருக்கு இந்து என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியருடன் 5 வயதுடைய தனுஷ் மற்றும் 2 வயதுடைய ரேவந்த் ஆகிய இரு குழந்தைகளும் வசித்து வந்தனர்.

Continues below advertisement

இந்நிலையில், இவர்களது வீட்டில் இருந்து அடிக்கடி குழந்தைகள் அலறும் சத்தம் கேட்டதாக கூறப்படும் நிலையில், இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள் ,  மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புப் பிரிவு மற்றும் சைல்ட்லைன் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது, வீட்டில் இருந்து குழந்தைகளின் அழுகை மற்றும் அலறல் சத்தம் அடிக்கடி கேட்டது உறுதியானதாக கூறப்படுகிறது. இதையடுத்து அதிகாரிகள் நகிரிகாந்தி ரவியின் வீட்டிற்குள் சென்று பார்த்த போது, இரு குழந்தைகளின் உடலிலும் தீக்காயங்கள் , நகக் கீறல்கள் , தாக்கப்பட்டதற்கான தழும்புகள் இருந்ததுடன், 2 வயது குழந்தையின் இடது கை மணிக்கட்டில் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்ததும் தெரிய வந்தது.

Continues below advertisement

தனிப்பட்ட வாழ்க்கைக்கு குழந்தைகள் இடையூறு

இதனால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் , இரு குழந்தைகளையும் மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சிகிச்சைக்கு சேர்த்தனர். தொடர்ந்து நகிரிகாந்தி ரவி மற்றும் அவரது மனைவி இந்துவிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளதாக கூறப்படுகிறது.

விசாரணையில், நகிரிகாந்தி ரவி ஏற்கனவே திருமணமாகி முதல் மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்ததும் , பின்னர் விவாகரத்து பெற்ற இந்துவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டதும் தெரிய வந்தது.

மேலும் , மூத்த குழந்தை இந்துவின் முதல் கணவருக்கு பிறந்த குழந்தை என்றும், தங்களது தனிப்பட்ட வாழ்க்கைக்கு குழந்தைகள் இடையூறாக இருப்பதாக கருதிய இருவரும், அவர்களை தொடர்ந்து உடல் ரீதியாக துன்புறுத்தி வந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

 

அதன்படி, கரண்டியை பழுக்கக் காய்ச்சி குழந்தைகளின் உடலில் சூடு வைத்தல், சிகரெட்டால் சுடுதல், கடுமையாக தாக்குதல் மற்றும் வார்த்தைகளால் மனரீதியாக துன்புறுத்துதல் உள்ளிட்ட கொடூர செயல்களில் அவர்கள் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, பிஎன்எஸ் சட்டம் மற்றும் சிறார் நீதி, குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பான சட்டப் பிரிவுகளின் கீழ் நகிரிகாந்தி ரவி மற்றும் இந்து ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதே வேளை மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற இரு குழந்தைகளும் பின்னர் சூர்யபேட்டையில் உள்ள அரசு குழந்தைகள் காப்பகத்திற்கு பாதுகாப்பாக மாற்றப்பட்டுள்ளனர். சொந்த தாய் தந்தையே இரண்டாவது திருமணம் செய்து கொண்டு பச்சிளம் குழந்தைகளை சித்ரவதை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.