பொங்கல் பண்டிகைக்கு முந்தைய இருதினங்களில் மட்டும் ரூ. 358 கோடி தொகைக்கு டாஸ்மாக் கடைகளில்  மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.  சமீபத்திய புல்லிவிவரங்களின் படி, கடந்த 12ம் தேதி ரூ.150 கோடிக்கும் அதிகமான மதிப்பில் மதுவிற்பனை செய்யப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகைக்கு முந்தைய தினமான நேற்று, ரூ.200 கோடிக்கும் கோடிக்கும் அதிகமான மதிப்பில் மது விற்பனையாகியுள்ளது.                 


நாளை (15-ந் தேதி) திருவள்ளூர் தினம் என்பதால் அன்றைய தினம் மதுக்கடைகள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 18-ந் தேதி வடலூர் வள்ளலார் நினைவு நாள் என்பதால் அன்றைய தினமும் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, ஆண்டுதோறும் ஜனவரி 26-ந் தேதி குடியரசு தினம் கொண்டாடப்படுவதால் அன்றைய தினமும் மதுபானக் கடைகள் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்த மூன்று தினங்கள் செயல்படாது என்று தமிழக அரசு அறிவித்துள்ள இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, குடிமகன்கள் அதற்கு முந்தைய தினங்களிலே மதுபானக் கடைகளில் அலைமோதுகின்றனர். குறிப்பாக, நாளை திருவள்ளூர் தினத்தன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் இன்று மதுபானக் கடைகளில் மேலும் கடும் கூட்டம் மோதும் என்றும் எதிர்பாரக்கப்படுகிறது.  


கொரோனா கட்டுப்பாடுகள்: 


கொரோனா மற்றும் ஒமிக்கிரான் பாதிப்பு தமிழ்நாடு நாடு முழுவதும் அதிகரித்து வருவதையடுத்து, பல்வேறு கட்டுப்பாடுகளை  தமிழக அரசு விதித்துள்ளது. வரும் 16ம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது . அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் ஊரடங்கிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், வரும் 31ம் தேதி இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


கொரோனா முன்னெச்சரிகை நடவடிக்கையாக, 14-ந் தேதி முதல் மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் மட்டுமின்றி தைப்பூசம் தினமான 18-ந் தேதி வரை 5 நாட்களுக்கு அனைத்து ஆலயங்களிலும் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.


ஆனால், டாஸ்மாக் கடைகள் குறித்து, எந்த அறிவிப்பும் தமிழக அரசால் வெளியிடப்படவில்லை. இந்த செயலை வன்மையாக கண்டித்த அதிமுக ஒருங்கினைப்பாளர் ஒ. பன்னீர்செல்வம்," மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு, கொரோனா மூன்றாவது அலையை ஓரளவுக்காவது தடுக்கும் வகையில், கொரோனா பரவலின் தாக்கம் 5% கீழ் செல்லும் வரையில் தமிழகத்திலுள்ள அனைத்து மதுக்கடைகளையும் உடனடியாக மூட தமிழக அரசு உத்தரவிட வேண்டும்" என்று வலியுறித்தினார்.  


ஒரு பக்கம் பள்ளிகள், கல்லூரிகளை மூடவும், வழிபாட்டு தலங்களை வாரத்தில் மூன்று நாட்கள் மூடவும் உத்தரவிட்டு விட்டு, மறுபக்கம் மதுக்கடைகளை திறந்து வைப்பது என்பது கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த உதவாது. மாறாக, தொற்றினை அதிகரிக்க வழிவகுக்கும்.பிப்ரவரி மாதத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உச்சத்தை தொடும் என்று வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். ஏனெனில் அந்த அளவுக்கு கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்து வருகிறது. உச்சத்தை ஓரளவுக்கு தளர்த்த வேண்டுமென்றால், தமிழ்நாட்டில் உள்ள மதுக்கடைகளை உடனடியாக மூட உத்தரவிடுவது தான் உத்தமமாக இருக்கும். அதை இந்த அரசு செய்ய வேண்டும் என்று மருத்துவ வல்லுநர்களும், சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் எதிர்பார்க்கிறார்கள் என்றும் தெரிவித்தார்.