டாஸ்மாக் பார்களில் சைட்டிஷ் விற்பனை செய்வது தொடர்பாக டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது.


இது தொடர்பாக டாஸ்மாக் நிறுவனத்தின் அனைத்து மண்டல மேலாளர்கள், மாவட்ட மேலாளர்களுக்கு மேலாண்மை இயக்குனர் எல்.சுப்பிரமணியன்  கடிதம் அனுப்பியிருக்கிறார்.




அக்கடிதத்தில், "டாஸ்மாக் சில்லறை மதுக்கடைகளின் இணைப்பில் உள்ள மதுக்கூடங்களில் (பார்) தின்பண்டங்கள் விற்பனை மற்றும் காலி பாட்டில்களை சேகரித்தல் ஆகியவற்றுக்கு இந்த மாதம் புது டெண்டர் கோரப்பட வேண்டும்.
அடிப்படையில் ‘அப்செட் பிரைஸ்’ என்ற ஏற்றத்தாழ்வு விலை நிர்ணயம் செய்யப்பட்டு, வெளிப்படை டெண்டர் விதிகளின் அடிப்படையில் 2 ஆண்டுகளுக்கான டெண்டரை இந்த மாதம் கோர வேண்டும்.
புதிய மதுக்கூட ஒப்பந்தங்கள் ஜனவரி 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும். மதுக்கூடத்தின் மாதாந்திர உரிம கட்டணம் அந்த 2 ஆண்டுகளுக்கு நிலையாக இருக்கும்.


தற்போதுள்ள டெண்டர் நடைமுறைகளை மீறி செயல்படுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  


சைட்டிஷ் டெண்டர் விடப்பட்டுள்ள அதே நேரத்தில் டாஸ்மாக் பற்றி இன்னொரு செய்தியும் வெளியாகியுள்ளது. அதாவது டாஸ்மாக் விறபனை சரிந்துவிட்டது என்பது தான் அந்த செய்தி. தமிழகத்தில் வடகிழக்கிப் பருவமழையால் தொடர்ந்து பெய்த கனமழையே இதற்க்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.


தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம் 5,410 கடைகள் வாயிலாக மது பானங்களை விற்பனை செய்கிறது. அவற்றில் தினமும் சராசரியாக 100 கோடி ரூபாய் மதிப்பிலான 70 ஆயிரம் பெட்டி பீர் வகைகளும்; 1.60 லட்சம் பெட்டி மது வகைகளும் விற்பனையாகின்றன.




இந்நிலையில் அண்மை காலமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், துாத்துக்குடி, கன்னியாகுமரி, வேலுார், திருப்பத்துார், தஞ்சை என, பல மாவட்டங்களிலு கன மழை பெய்தது.  


இதையடுத்து, டாஸ்மாக் கடைகளில் நவம்பரில் பீர் விற்பனை, 19.94 லட்சம் பெட்டிகளாகவும்; மது வகைகள் விற்பனை 52 லட்சம் பெட்டிகளாகவும் சரிந்தன. அக்டோபரில் அவற்றின் விற்பனை முறையே, 22.74 லட்சம்; 53 லட்சம் பெட்டிகளாக இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.


இதற்கிடையில், டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி இயங்கி வந்த நிலையில், இந்த நேரம் மாற்றியமைக்கப்பட்டது. டாஸ்மாக் கடைகள் கொரேனா தொற்று முன் இருந்தது போலவே, பிற்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை திறக்கப்படுகின்றன.


விட்டதைப் பிடிக்க வேண்டிய வேகத்தில் டிசம்பரில் விற்பனை சரிவை சீர் செய்ய உத்தரவுகள் வந்துள்ளனவாம். மார்கழி குளிருக்கு குடிமகன்கள் உள்ளேய்யும் ஸ்வெட்டரை அதிகமாக செலுத்துவார்கள் என்ற நம்பிக்கையும் டாஸ்மாக்குக்கு வந்துள்ளதாம்.