தமிழ்நாட்டிற்கு அதிகளவு மழைப்பொழிவைத் தரும் வடகிழக்கு பருவமழை வரும் 15ம் தேதி முதல் தொடங்குகிறது. வடகிழக்குப் பருவமழை தமிழ்நாட்டில் வழக்கத்தைவிட அதிகளவு இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.



4 மணி வரை இடியுடன் கூடிய கனமழை:


இந்த நிலையில், தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாகவே தொடர்ந்து மழை அதிகளவு பெய்து வருகிறது. நேற்று முன்தினமும், நேற்றும் பல மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கிய நிலையில், இன்று மாலை 4 மணி வரை தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.


தேனி, திண்டுக்கல், மதுரை, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, நீலகிரி, கோயம்புத்தூர் மறறும் ஈரோடு ஆகிய 10 மாவட்டங்களில் மாலை 4 மணி வரை இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.






மேலும் பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, கடலூர், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்தள்ளது.


நீர்நிலைகளில் அதிகரிக்கும் நீர்வரத்து:


பல மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக அந்தந்த மாவட்டங்களில் உள்ள முக்கிய நீர்நிலைகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் அடுத்து வரும் மாதங்கள் விவசாயத்திற்கு மிகவும் உகந்த மாதம் என்ற சூழலில், தொடர்ந்து மழை பெய்து நீர்நிலைகளில் தண்ணீர் அதிகளவு காணப்படுவது விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம், நீர்நிலைகளின் கரைகளை வலுப்படுத்தவும் அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.


வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட அதிகளவு பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால், சுகாதாரத்துறை மற்றும் பொதுப்பணித்துறையினர் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும் அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.