தென்மேற்கு வங்கக்கடலில் நிலவுகின்ற காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, சென்னைக்கு கிழக்கே சுமார் 320 கி.மீ தொலைவில் உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, சுமார் 20 கி.மீ வேகத்தில் நகர்ந்து கொண்டு வருவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.


”வலுவிழக்கக்கூடும்”


காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, மேற்கு-வடமேற்கு திசையில் தெற்கு ஆந்திர, தமிழக-புதுவை கடற்கரை நோக்கி நகர்ந்து நாளை (நவ.22) காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.


வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும்,  தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும்  இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.


இந்நிலையில் நாளை ( நவ.22 ) திருவள்ளூர், காஞ்சிபுரம், இராணிப்பேட்டை மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.


சென்னை:


அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23  டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.






மீனவர்களுக்கான எச்சரிக்கை:  


இன்று மற்றும் நாளையில் ஆந்திர கடலோரப்பகுதிகள், தமிழக-புதுவை கடலோரப்பகுதிகள்,  இலங்கை கடலோரப்பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நாளை காலை வரை `சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதன் பிறகு காற்றின் வேகம் படிப்படியாக குறையக்கூடும். 






மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.


Also Read: கரூர்: அமராவதி அணையின் தண்ணீர் வரத்து நிலவரம்.