தமிழ்நாட்டில் உள்ள 11 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படும் நிலையில், அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காகச் சென்றவர்கள், வீட்டுக்குச் செல்லும் போது எச்சரிக்கையுடன் செல்லுங்கள். 


தமிழ்நாட்டில் உள்ள கோடை வெயில் வாட்டி வதைத்த நிலையில், மே மாதம் தொடங்கியதில் இருந்தே மழை பெய்ய ஆரம்பித்தது. ஒரு சில மாவட்டங்களில் சாதாரண கோடை மழையைவிட மிக கனமழை பெய்தது. இந்நிலையில், இன்று இரவு 7 மணி வரை 11 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது


11 மாவட்டங்கள்:






நீலகிரி, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, கரூர், நாமக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, திருச்சி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 11 மாவட்டங்களில் இன்று 7 வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 


இந்நிலையில், வானிலை மையம் தெரிவித்ததாவது, 


நேற்று மத்தியமேற்கு மற்றும் அதனை   ஒட்டியுள்ள   தெற்கு  வங்கக்கடல்   பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடகிழக்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, இன்று (24.05.2024) காலை 05:30 மணி அளவில் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலவியது.


 


 


இது வடகிழக்கு திசையில் நகர்ந்து இன்று காலை 08:30 மணி அளவில் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் வங்கதேச-கேப்புப்பாராவிலிருந்து சுமார் 730 கி.மீ தெற்கு-தென்மேற்கேயும் மற்றும் மேற்குவங்காள- கேன்னிங்-லிருந்து சுமார் 750 கி.மீ தெற்கேயும் மையம் கொண்டுள்ளது. இது மேலும் வடகிழக்கு திசையில் நகர்ந்து , புயலாக வலுப்பெற்று, 25.05.2024 காலை மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவக்கூடும். அதன் பிறகு, இது வடக்கு திசையில் நகர்ந்து, தீவிர புயலாக 25.05.2024  இரவு வலுப்பெற்று, 26.05.2024 நள்ளிரவு தீவிர புயலாக வங்க தேசம் மற்றும் அதனை ஒட்டியுள்ள மேற்குவங்காள கடற்கரையை கடக்க கூடும்.


 


மேலும், தெற்கு கேரள மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் ஒரு வளி மண்டல மேலடுக்கு   சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.


 


அடுத்த ஐந்து தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை பற்றிய  முன்னறிவிப்பு:


24.05.2024 முதல் 28.05.2024 வரை:


அடுத்த 5 தினங்களுக்கு, அதிகபட்ச வெப்பநிலை, தமிழகம்,  புதுவை மற்றும்  காரைக்கால்  பகுதிகளில்  பொதுவாக  2-3°  செல்சியஸ் படிப்படியாக  உயரக்கூடும்.


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான   வானிலை முன்னறிவிப்பு:


அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும்.


மீனவர்களுக்கான எச்சரிக்கை: 


தமிழக கடலோரப்பகுதிகள்:


24.05.2024-25.05.2024: குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.


26.05.2024-28.05.2024: குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.


வங்கக்கடல் பகுதிகள்:


24.05.2024: மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.


தென் வங்கக்கடல் பகுதிகள், மத்திய மேற்கு பகுதிகள் மற்றும் வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில்  சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.


தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில்  சூறாவளிக்காற்று  மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.


25.05.2024: 25.05.2024 மாலை வரை மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 60 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 110  கிலோ மீட்டர் வேகத்திலும், அதன் பிறகு சூறாவளிக்காற்று மணிக்கு 90 முதல் 120 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 135  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.


தென் வங்கக்கடல் பகுதிகள், இதர மத்தியகிழக்கு, மத்தியமேற்கு மற்றும் வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.


அந்தமான் கடல் பகுதிகளில்  சூறாவளிக்காற்று  மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் எனவும் வானிலை தெரிவித்துள்ளது.