கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் இன்று சசிகலாவிடம் சென்னையில் விசாரணை நடத்தப்பட்டது. கோடநாட்டில் இருந்த சொத்துகள் என்ன? காணாமல் போனது என்ன? போன்றவை குறித்து சசிகலாவிடம் இன்று விசாரணை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் விசாரணையில், கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்க நான் எந்தவிதமான விசாரணையை எதிர்கொள்ளவும் தயார் என சசிகலா தெரிவித்துள்ளார்.


கோடநாடு பங்களாவில் இருந்த ஊழியர்கள் மற்றும் காவலர்கள் எத்தனை பேர்? அவர்களையெல்லாம் பணிக்கு அமர்த்தியது யார் ?பங்களாவில் என்னென்ன பொருட்கள் இருந்தன உள்ளிட்ட பல கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா குறித்த ஒவ்வொரு கேள்விகளுக்கும் சசிகலா உணர்ச்சிவசப்பட்டுள்ளார்.


சசிகலாவின் விசாரணை வீடியோ பதவி செய்யப்பட்டது. சுமார் 100 கேள்விகள் சசிகலாவிடம் கேட்கப்பட்டதாக தெரிகிறது.


சென்னை தியாகராய நகரில் இருக்கும் சசிகலாவின் இல்லத்தில் இன்று காலை விசாரணையைத் தொடங்கியது தனிப்படை. சுமார் இரண்டு மணிநேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த விசாரணையில் பல்வேறு கேள்விகள் சசிகலாவிடம் கேட்கப்பட்டிருக்கிறது. கொடநாட்டில் ஜெயலலிதாவுடன் இருந்தவர் என்ற வகையிலும், அங்கு என்னென்ன பொருள்கள், ஆவணங்கள் இருந்தது என்பதை அறிந்தவர் என்ற வகையிலும் சசிகலாவிடம் நடந்தப்படும் இந்த விசாரணை முக்கியமாகப் பார்க்கப்படுகிறது. ஐஜி சுதாகரன் தலைமையிலான 8 பேர் கொண்ட தனிப்படை போலீஸார் இந்த விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்


ஜெயலலிதாவிற்கு சொந்தமான கோடநாடு கொலை – கொள்ளை வழக்கு, திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு வேகம் எடுத்த நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சசிகலாவின் அண்ணன் மகனும் ஜெயா டிவியின் சி.இ.ஓ.வுமான  விவேக் ஜெயராமன் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டார். இந்நிலையில் கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் இன்று சசிகலாவிடம்  விசாரணை நடத்தப்பட்டுள்ளது. கோடநாடு விவகாரத்தில் சசிகலாவின் விசாரணை முக்கிய திருப்பங்களை ஏற்படத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 


நடந்தது என்ன?


கோடநாடு வழக்கில் பிடிபட்ட கொள்ளையர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டது சில கைக் கடிகாரங்களும் குரங்கும் பொம்மையும்தான் என போலீசார் தெரிவித்த நிலையில், உண்மையில் கோடநாடு பங்களாவில் என்ன இருந்தது என்பது அந்த பங்களாவிற்குள் ஜெயலலிதாவோடு சென்று வந்த சசிகலா, தினகரன், விவேக், இளவரசி உள்ளிட்டோருக்குதான் தெரியும் என்று கூறப்பட்டு வந்தது. அதனால், போலீசார் சசிகலா-வையும் அவருடன் தொடர்புடையோர்களையும் விசாரணை வளையத்திற்கு கொண்டுவந்தால் மட்டுமே கொள்ளை எதற்காக நடந்தது ? அங்கு என்ன இருந்தது என்பது தெரியும் என பேசப்பட்டு வந்த நிலையில், முதலில் விவேக்கிடம் போலீசார் விசாரணையை தொடங்கினர். 


கொள்ளை நடந்த நாளில் சசிகலா பெங்களூரு சிறையில் இருந்தார் என்பதால், அந்த நேரத்தில் அவரை சிறையில் சென்று பார்த்தவர்களில் விவேக் ஜெயராமன், டிடிவி தினகரன் உள்ளிட்டோர் பங்களாவோடு தொடர்புடையவர்கள் என்பதால், முதலில் விவேக், அடுத்து தினகரன், பின்னர் சசிகலாவிடம் விசாரணை நடத்தவும் தனிப்படை போலீசார் முடிவு செய்துள்ளனர்.