முடி வளர ஆபரேஷன் பண்ணப்போறீங்களா? அரசாங்கம் சொன்னதை படிச்சுட்டு போங்க!
முடி மாற்று அறுவை சிகிச்சையை முறையான பயிற்சியும், அரசு அங்கீகாரமும் இல்லாமல் மேற்கொள்ளும் மருத்துவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்றைய சமுதாயத்தில் இளைஞர்கள் பலரும் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினையாக இருப்பது முடி உதிர்வு. திருமணம் பாதிப்பு, மன அழுத்தம் என பல பிரச்சினைகளை இதனால் எதிர்கொள்வதால் பலரும் முடி உதிர்வு பிரச்சினைக்கு சிகிச்சை மேற்கொள்கின்றனர். ஹேர் ப்ளான்டெசென் எனப்படும் முடி வளர்வதற்கான அறுவை சிகிச்சை இன்று இந்தியா முழுவதும் பலராலும் செய்யப்படுகிறது.
முடி வளர சிகிச்சை:
இந்த முடி வளர்வதற்கான அறுவை சிகிச்சையில் பல போலி மருத்துவர்களும் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் இயங்கி வந்த போலி காவல்துறையினரால் சீல் வைக்கப்பட்டது. இந்த சூழலில், தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது,
அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர்கள்:
முடி மாற்று சிகிச்சைகள் மற்றும் பொலிவிற்கான ஒழுங்கு முறையைப்படுத்தப்பட்ட வழிகாட்டுதல்களை, 2022ல் தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ளது. இதன்படி, முடி மாற்று அறுவை சிகிச்சை மற்றும் லேசா் நுட்பத்திலான தோல் சிகிச்சைகளை மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்த, அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர்கள் மட்டுமே செய்ய வேண்டும்.
மருத்துவ நிறுவனங்கள் பதிவு சட்டத்தின் கீழ், உரிமம் பெற்ற மையங்களில் மட்டுமே அத்தகைய சிகிச்சைகள் வழங்க வேண்டும். உரிய பாதுகாப்பு வழிகாட்டுதல்களை பின்பற்றுவது கட்டாயம் ஆகும். அதற்கு முன்பாக சிகிச்சை செய்துகொள்ள உள்ள நபரின் ஒப்புதலைப் பெறுவது அவசியம்.
சட்ட நடவடிக்கை:
சிகிச்சைகள் தொடர்பான ஆவணங்களை முறையாக பராமரிக்க வேண்டும். மக்கள் நல்வாழ்வுத்துறையால் சிகிச்சை மையங்களில் தொடர் கண்காணிப்புக்கும், ஆய்வுக்கும் உட்படுத்தப்படும். அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ தகுதிகள் இல்லாமல் விதிகளுக்கு புறம்பாக சிகிச்சைகளை வழங்குவது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட நபர் மற்றும் நிறுவனம் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். பதிவுபெற்ற மருத்துவர்கள் சிகிச்சைகளை வழங்கும்போது, உரிய விதிகளை கடைபிடிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவறான சிகிச்சை:
ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கம், மாறி வரும் வாழ்க்கை முறை, போதிய தூக்கமின்மை போன்ற காரணங்களால் முடி உதிர்வு பிரச்சினை தொடர்ந்து பலருக்கும் அதிகரித்து வருகிறது. இதனால், 20 வயதுகளிலே பலரும் முடி உதிர்வு பிரச்சினையை எதிர்கொள்கின்றனர்.
இதற்கு தீர்வாக முடி மாற்று அறுவை சிகிச்சையை பலரும் மேற்கொள்கின்றனர். அவ்வாறு சிகிச்சை மேற்கொள்ளும் சிலர் தவறான மற்றும் போலி மருத்துவர்களிடம் சிகிச்சை பெறுவதால் அவர்கள் கடுமையான பாதிப்பைச் சந்திக்க நேரிடுகிறது.
முடிக்கு சிகிச்சை மேற்கொள்ளும் நபர்கள் தாங்கள் சிகிச்சை மேற்கொள்ள உள்ள மருத்துவர் முறையாக மருத்துவம் பயின்றவரா? அரசின் அங்கீகாரம் பெற்றவரா? என்பதை உறுதி செய்தபிறகே மருத்துவம் மேற்கொள்வது நன்மை பயக்கும்.






















