தமிழகத்தில் முகக்கவசம் அணியாததற்காக இதுவரை 261344 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்தது.

  


இதுதொடர்பாக  தமிழகக் காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”கொரோனா வைரஸ் நோய்த் தொற்றைத் தடுப்பதற்காக, தமிழக அரசின் உத்தரவுப்படி, தமிழக காவல்துறை, முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியைப் பின்பற்ற மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு, பல்வேறு வழிமுறைகளை கையாளுகிறது. அதில், பொது இடங்களில் முகக்கவசம் அணிய வலியுறுத்தி, முகக்கவசம் அணியாத நபர்கள் மீது 14.04.2021 அன்று மட்டும் 40,538 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 08.04.2021 முதல் இன்று வரை 2,61,344 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கும் பொருட்டு, சமூக இடைவெளியைப் பின்பற்றாத நபர்கள் மீது 14.04.2021 அன்று மட்டும் 1,011 வழக்குகளும், 08.04.2021 முதல் இன்று வரை 10,018 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது




மேலும் ”தமிழகத்தில் ஏற்படும் விபத்துகளை தவிர்க்கும் பொருட்டு இரு சக்கர வாகனம் ஓட்டும் போது, தலைக்கவசம் அணியாத நபர்கள் மீது 14.04.2021 அன்று 69,653 வழக்குகளும் 08.04.2021 முதல் இன்று வரை 5,39,059 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் நான்கு சக்கர வாகனம் ஓட்டும் போது சீட் பெல்ட் அணியாத நபர்கள் மீது 14.04.2021 அன்று 14,868 வழக்குகளும் 08.04.2021 முதல் இன்றுவரை 1,07,836 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அதிகபடியாக சுமை ஏற்றுதல், வாகனம் ஓட்டும் போது செல் போன் உபயோகித்தல், குடிபோதையில் வாகனம் ஓட்டுதல் போன்றவற்றின் கீழ் 14.04.2021 அன்று 19,551 வழக்குகளும், 08.04.2021 முதல் இன்று வரை 1,38,250 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.