சேலம் மாவட்டத்தில் ரூ. 164 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 73 திட்டப்பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.


அதற்கு பிறகு பேசிய அவர், “தருமபுரி என்று சொன்னதுமே என்னுடைய நினைவுக்கு வருவது. ஒகேனக்கல்!


1928 கோடி ரூபாயில் உருவாக்கப்பட்ட, ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்துக்கு. 2008-ஆம் ஆண்டு, உள்ளாட்சித் துறை அமைச்சரான நான், ஜப்பான் நாட்டிற்குச் சென்று, நிதி வசதிகளையும், திட்டமிடுதல்களையும் செய்தேன்.


முதலமைச்சர் கலைஞர் அவர்கள் அந்த திட்டத்தை அன்றைக்கு தொடங்கி வைத்தார். ஆனால், ஆட்சி மாறியதும், காட்சி மாறியது. ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கு முட்டுக்கட்டை போட்டார்கள். உடனே நானே இங்கே நேரில் வந்து போராட்டம் நடத்தினேன். அதை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். அந்த வகையில், தருமபுரி மாவட்டத்து மக்களுக்கு நல்ல குடிநீர் கிடைக்க காரணமானவன் நான் என்ற மகிழ்ச்சியோடு உங்களிடையே நான் நின்று கொண்டிருக்கிறேன்.


அவ்வையின் வரலாற்றில் தருமபுரிக்கு எப்படி பங்கு இருக்கிறதோ. அதேபோல, தமிழ்நாட்டு மகளிர் முன்னேற்றத்திலேயும் தருமபுரிக்கு முக்கிய பங்குண்டு!


1989-ஆம் ஆண்டு இதே தருமபுரியில் தான் மகளிர் சுய உதவிக் குழுக்கள் என்ற அமைப்பை தமிழினத் தலைவர் கலைஞர் அவர்கள் தொடங்கி வைத்தார். அவர் பேரால் ஏராளமான மகளிர் வாழ்வில் மகிழ்ச்சியை உருவாக்கியிருக்கிறது. கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பிக்கின்ற முகாமும் இங்கேதான் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது.


இந்த ரெண்டு திட்டங்களும் மகளிர் வாழ்வுல ஒளிவிளக்காக திகழ்ந்து கொண்டிருக்கிறது! பெண்களுக்கு சொத்தில் சமபங்கு என்ற சட்டம் அதை இயற்றியவர் தலைவர் கலைஞர் அவர்கள்.


இது பெண்ணினத்திற்கு திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி வழங்கிய மாபெரும் அதிகாரக் கொடை! அதன் அடுத்தகட்டம்தான் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்!


உரிமைத் தொகை வழங்குவோம் என்று சொன்னோம்; அதை நிறைவேற்றிக் தேர்தலில் காட்டியிருக்கிறோம். ஏனென்றால், உங்கள் எல்லாருக்குமே தெரியும். இது, "சொன்னதைச் செய்யும் ஆட்சி!"


இந்த திட்டத்தால் இன்றைக்கு ஒரு கோடியே 15 லட்சம் மகளிருக்கு, மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் கொடுக்கிறோம் என்றால், அவர்களை பொருளாதார மாற்றியிருக்கிறோம் என்று பொருள்! அதிகாரம் உள்ளவர்களாக


கொஞ்ச நாளைக்கு முன்னால், டிவி-யில் ஒரு பேட்டி பார்த்தேன். இந்த உரிமைத்தொகைய பெற்ற சகோதரி ஒருவர். "இது ஸ்டாலின் அண்ணன் கொடுத்த சீர்" என்று சொன்னார்கள். அப்போது எனக்கு என்ன தோன்றியது என்றால், நம்ம திராவிட மாடல் அரசுக்கும் தமிழ்நாட்டு மகளிருக்கும் இந்த திட்டத்தால் ஏற்பட்டுள்ள குடும்ப பாசத்தை எண்ணி மனம் நெகிழ்ந்து போனேன்.


இது மட்டுமல்லாமல், இந்த திராவிட மாடல் அரசு இதுவரை நிறைவேற்றியிருக்கிற திட்டங்கள பட்டியலிட வேண்டும் என்றால். நாள் முழுக்க நான் பேசிக் கொண்டே இருக்கவேண்டும், சொல்லிக் கொண்டே இருக்கவேண்டும். அதனால், முத்தான சில திட்டங்களை பற்றி மட்டும் சொல்ல விரும்புகிறேன்.


"விடியல் பயணத் திட்டம்" மூலமாக நமது சகோதரிகள் மாதந்தோறும் 888 ரூபாய் வரை சேமிக்கிறார்கள்.


முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தில் நாள்தோறும் 16 லட்சம் குழந்தைகள் வயிறார சாப்பிடுகிறார்கள்.


மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் "புதுமைப்பெண்" திட்டம் மூலமாக மாணவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் போய்ச் சேருகிறது.


இரண்டே ஆண்டில், 'நான் முதல்வன்' திட்டம் மூலமாக 28 லட்சம் இளைஞர்கள் திறன் பயிற்சி பெற்றிருக்கிறார்கள்.


'இல்லம் தேடிக் கல்வி' திட்டம் மூலமாக 24 லட்சத்து 86 ஆயிரம் பள்ளிக் குழந்தைகள் பயனடைந்திருக்கிறார்கள்.” என பேசினார்.


பிரதமர் குறித்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்:


பிரதமர் குறித்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “


சென்னையில் வெள்ளம் வந்தபோது, பாதிக்கப்பட்ட மக்களை பார்க்க வராத பிரதமர் மோடி -தூத்துக்குடியில் வெள்ளம் வந்தபோது பாதிக்கப்பட்ட மக்களை பார்க்க வராத பிரதமர் மோடி இப்போது மட்டும் அடிக்கடி வருகிறாரே? என்ன காரணம்? தேர்தல் வரப் போகிறது. ஓட்டு கேட்டுதான் வருகிறார் என்று மக்களுக்குத் தெரியும்.


'தமிழ்நாட்டு மக்களின் வளர்ச்சி நிதியை கொள்ளையடிக்க நான் விடமாட்டேன்' என்று சொல்லி இருக்குறார் பிரதமர் அவர்கள். தமிழ்நாட்டுக்கு அவர் என்ன வளர்ச்சி நிதியை கொடுத்திருக்கார்?


ஜி.எஸ்.டி வரி இழப்பீட்டு நிறுத்தியதால், தமிழ்நாட்டுக்குச் சேர வேண்டிய 20 ஆயிரம் கோடி ரூபாய் கிடைக்கவில்லை.


வெள்ள நிவாரணமாக நாம் கேட்ட 37 ஆயிரம் கோடிய தரவில்லை. மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டப் பணிகளுக்கு பணம் தரவில்லை. ஒப்புதலும் வழங்கவில்லை. பிரதமர் வீடுகட்டும் திட்டத்துக்கு முக்கால் பங்கு பணம் தருவது மாநில அரசுதான்.


வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்குகிறற ஜல்ஜீவன் திட்டத்துக்கு மாநில அரசின் பங்களிப்பு 50 விழுக்காடு. இதை எல்லாம் வைத்து பார்க்கும்போது மாநில அரசிடம் பணம் வாங்கித்தான் தன்னுடைய ஸ்டிக்கரை பிரதமர் ஒட்டிக்கிறார் என்று அவருக்கு நான் நினைவூட்ட விரும்புகிறேன்.


இன்னும் கேட்கவேண்டும் என்றால், ஒன்றிய அரசுக்கு வரி வருவாய் எங்கே இருந்து வருகிறது? மாநிலங்களின் வரியாக இருந்தாலும், ஒன்றிய வரியாக இருந்தாலும் மாநிலங்களில் இருக்கின்ற மக்கள் கொடுக்கின்ற வரிதான்!


வெறும் கையால் முழம் போடுவது என்று சொல்லுவார்கள். அதுபோல. தமிழ்நாட்டுக்கு வந்து வெறும் கையால் முழம் போட்டுக் கொண்டு இருக்கிறார் நம்முடைய பாரதப் பிரதமர் மோடி அவர்கள். தேர்தல் நேரத்தில் மட்டும்தான் பிரதமருக்கு மக்கள் மேல பாசம் பொங்கும்... இதை தமிழ்நாட்டு மக்கள் நன்றாக உணர்ந்திருக்கிறார்கள். ஆனால், நாங்கள் உங்களுடன் இருக்கிறோம். மக்களான நீங்கள் எங்களோடு இருக்கிறீர்கள்.


மக்களும், அரசும். திராவிட முன்னேற்றக் கழகமும் ஒரே குடும்பமாக செயல்பட்டு வருகிறோம். இதைத்தான் குடும்ப ஆட்சி என்று விமர்சிக்கிறார்கள்.


தமிழ்நாட்டில் நடப்பது கோடிக்கணக்கான குடும்பங்களின் நலனுக்காக நடக்கின்ற ஆட்சி தான் இது! அதனால்தான் உங்கள் குடும்ப விழாவுக்கு வருகின்ற மாதிரி நீங்கள் எல்லாம் இங்கு உரிமையுடன் வந்திருக்கிறீர்கள்.


இதே உணர்வோடும், வளமோடும். நலமோடும் வாழ்வோம்! தமிழ்நாட்டையும் வாழ வைப்போம்! இந்தியாவுக்கும் வழிகாட்டியாக நாம் மாறுவோம்!” என தெரிவித்தார்.