TN Bus Strike: தமிழ்நாட்டில் பொதுமக்கள் அச்சமின்றி பயணம் செய்ய ஏதுவாக உள்ளூர், வெளியூர் பேருந்துகள் முழுமையாக இயக்கப்படுவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

”பேருந்து போக்குவரத்து சீராக உள்ளது”:

காபோக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் சார்பில் வெளியாகியுள்ள அறிக்கையில், ”தமிழ்நாடு முதலமைச்சர்,  பொது மக்கள் பாதுப்பாகவும், அச்சமின்றியும் பேருந்துகளில் பயணம் செய்ய ஏதுவாக, முழுமையாக பேருந்துகளை இயக்கிட உத்தரவிட்டுள்ளார். அதன்படி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில், உள்ளூர் மற்றும் வெளியூர் செல்லும் பேருந்துகள் அனைத்து வழித்தடங்களிலும் 2-வது நாளாக இன்றும் (10.01.2024) முழுமையாக இயக்கப்பட்டு வருகிறது.

த.நா.அ.போ. கழகம் இயக்கப்பட வேண்டிய பேருந்துகள் இயக்கப்படும் பேருந்துகள் இயக்க சதவிகிதம்
மாநகர போக்குவரத்து கழகம் 3,233 3,210 99.29
அரசு விரைவு போக்குவரத்து கழகம் 89 89 100.00
விழுப்புரம் 2,359 2,278 96.57
சேலம் 1,249 1,222 97.84
கோயம்புத்தூர் 2,159 2,095 97.04
கும்பகோணம் 3,143 3,070 97.68
மதுரை 2,166 2,134 98.52
திருநெல்வேலி 1,630 1,624 99.63
மொத்தம் 16,028 15,722 98.09%

 

எனவே, பயணிகள் எந்தவித அச்சமின்றி, பாதுகாப்புடன் பயணம் மேற்கொள்ள அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. மேலும், அனைத்து போக்குவரத்துக் கழக பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்கள் பணியில் முழுமையாக ஈடுபட்டுள்ளனர். பேருந்துகள் இயக்கத்தினை அனைத்து போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்கள், உயர் அலுவலர்கள் மற்றும் அனைத்து போக்குவரத்துக் கழக பணியாளர்கள் முழுமையாக கண்காணித்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பதனை தெரிவித்துக் கொள்கிறோம்” என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

வேலைநிறுத்தம் ஏன்? 

ஊதிய உயர்வு, நிலுவைத்தொகை விடுவிப்பு, பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  திங்கட்கிழமை நள்ளிரவில் தொடங்கிய வேலை நிறுத்தம் இன்று 2வது நாளாக தொடர்கிறது. கோரிக்கைகள் தொடர்பாக அரசு தரப்பில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தியும் அதில் சுமூகமான உடன்பாடு எட்டப்படவில்லை. தொழிற்சங்கங்கள் சொன்ன 6 கோரிக்கைகள் 2 கோரிக்கைகளை மட்டுமே தற்போதைக்கு பரீசிலிக்க முடியும். மற்ற கோரிக்கைகளை பொங்கல் பண்டிகை முடிந்த பின்னர் பேசிக்கொள்ளலாம் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில் அது ஏற்கப்படவில்லை. இதனைத் தொடர்ந்து திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் தொடங்கியது. 

இதனால் தமிழ்நாட்டில் அரசு பேருந்துகள் ஓடுமா என்ற கேள்வி மக்களுக்கு எழுந்தது. இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் தொமுச மற்றும் ஐ.என்.டி.யு.சி தொழிற்சங்கங்கள் பங்கேற்கவில்லை. இதனால் அந்த சங்க ஊழியர்களை கொண்டும், தற்காலிக பேருந்து ஓட்டுநர்களை கொண்டும் மக்களுக்கு சிரமம் ஏற்படாத வகையில் பேருந்துகள் இயக்கப்பட்டது. இதனிடையே, போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தத்திற்கு எதிராக உயர்நிதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.  அந்த வழக்கு விசாரணையில் அரசும், போக்குவரத்து சங்கமும் ஏன்  இந்த விவகாரத்தில் பிடிவாதமாக இருக்கிறீர்கள்? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ஓய்வூதியர்களுக்கு மட்டும் ஜனவரிக்கான அகவிலைப்படி வழங்குவது குறித்து இன்று பிற்பகலில் அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளனர்.