கோவை சிட்ரா பகுதியில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பா.ஜ.க. சார்பில் பெண்மையை போற்றுவோம் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு, பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த 13 பெண்களுக்கு விருதுகளை வழங்கி கெளரவித்தார்.


பா.ஜ.க. வளர வேண்டும்:


பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அண்ணாமலை, “என் பேருக்கு பின்னால் எம்.பி, எம்எல்ஏ என போடுவதற்காக நான் கட்சிக்கு வரவில்லை. பாஜக வளர வேண்டும் என்பது தான் எனது இலக்கு. இன்னொரு கட்சியின் பலவீனத்தை பயன்படுத்தி பாஜக வளர கூடாது. அப்படி வளர்ந்தாலும் கூட அது தொடர்ச்சியானதாக இருக்காது. பாஜக தமிழக மக்களின் அன்பை பெற்று வளர வேண்டும். நேற்று மதுரையில் பேசியது தான் என்னுடைய கருத்து. அதிலிருந்து ஒரு படி மேலும் கிடையாது. கீழும் கிடையாது. 




ஒப்பிட வேண்டாம்:


மற்றவர்களுடைய தனிப்பட்ட கருத்துக்கள் என்பது அவரவர்கள் அவருடைய கருத்துகள். வேறு வேறு கட்சியில் இருக்கும் தலைவர்கள் வளர்ந்த கட்சியின் இணைந்து தலைவர்களாக இருக்கின்றனர். பாஜக தொண்டர்கள் யாரும் செல்லாத பாதையில் சென்று கொண்டிருக்கிறார்கள் என்னுடைய பாதை தனியாகத்தான் இருக்கிறது. பாஜகவை அதிமுகவுடன் இணைத்து பேசாதீர்கள். ஆளும் கட்சியுடன் கம்பேர் பண்ணாதீர்கள். மற்ற கட்சியில் இருக்கும் எல்லா தலைவர்களும் ஆட்சிக்கு வந்த பிறகு தான் இணைந்திருப்பார்கள்.


பாஜக தொண்டர்கள் எப்பொழுது ஆட்சிக்கு வரும் என தெரியாமல் காத்திருக்கின்றனர். அதில் நானும் ஒருவனாக இருக்கின்றேன். அ.தி.மு.க.வினை  பாஜகவுடன் ஒப்பீடு செய்வது சரியான ஒப்பீடு கிடையாது. எங்களுடைய பாதை தனித்தன்மையான பாதை. அது எப்படி இருக்கும் என்று சொல்லிவிட்டேன். நான் இப்படி இருப்பேன் என்று சொல்லிவிட்டேன். நான்  எதற்கும் மாற மாட்டேன் என்று சொல்லிவிட்டேன். நான் தலைவராக இருக்கும் வரை இந்த கட்சி இப்படித்தான் இருக்கும். இந்த கட்சியில் இன்டர்னலாக சில விஷயங்கள் மாறித்தான் ஆக வேண்டும்.




ஜெயலலிதாவுடன் ஒப்பிடு:


ஆட்சிக்கு வருவோம் என்று சொல்வது எளிது. அப்படி சொல்ல நான் விரும்பவில்லை. எனது தொண்டர்களையும் அப்படி வழிநடத்த விரும்புவதில்லை. சில இடங்களுக்கு செல்ல வலி எடுக்க வேண்டும், ரத்தம் வரவேண்டும், அவமானங்களை சந்திக்க வேண்டும். அனைத்து விமர்சனங்களையும் கடந்து தான் செல்ல வேண்டும். ஒவ்வொரு விமர்சனங்களுக்கும் அண்ணாமலை பதில் சொல்ல தேவையில்லை.  எல்லா கட்சியும் வளர்ந்து வந்த பாதை வேறு. பாஜக வளரும் பாதை வேறு. இவர்கள் யார் கருத்து சொன்னாலும் அது அவர்களுடைய கருத்துக்கள். அது அவர்களுடைய அரசியல் அனுபவத்தை வைத்து சொல்கின்றனர். நான் நேற்று சொன்ன கருத்தில் உறுதியாக இருக்கின்றேன். ஒரு படி முன்னேறி செல்வது கிடையாது பின்னே செல்வது கிடையாது.




ஜெயலலிதாவுடன் யாரையும் ஒப்பிடவில்லை. யாரும் யாரையும் கம்பேர் பண்ணவில்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தன்மையும் இருக்கிறது. சில அரசியல் கட்சிகளில் மேனேஜர் இருக்கின்றனர். சில கட்சிகளில் தலைவர்கள் இருக்கின்றனர். ஜெயலலிதாவிற்கு டெபாசிட் போனாலும் துணிந்து நின்று தேர்தலில் ஜெயித்தார்கள். தலைவர் எப்படி இருப்பார் என்பதற்கான உவமை தான் அது. இந்த அரசியலில் காப்பர்மைஸ் பாலிடிக்ஸ் எனக்கு தேவையில்லை. என்னுடைய முடிவில்  தெளிவாக இருக்கின்றேன்.


கூட்டணியில் சங்கடம் இல்லை:


பாஜகவின் காலம் வந்து விட்டதாக நான் கருதுகின்றேன். நான் யாருடனும் என்னை ஒப்பிட்டு பார்க்கவில்லை. எனது தாய், மனைவி ஜெயலலிதாவை விட மேலானவர்கள். அதிமுக பாஜக கூட்டணியில் எந்த சங்கடமும், வருத்தமும் இல்லை. உரசலும் மோதலும் இல்லை. அவதூறு வழக்குகள் போடாமல் இருக்கும் தலைவர் நான் மட்டும் தான். மக்கள் மன்றத்தில் கருத்துகளை சொல்லட்டும், அவர்கள் முடிவு எடுக்கட்டும். 


ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என்பது தான் பாஜக நிலைப்பாடு. ஆளுநர் சில கேள்விகள், சந்தேகங்களை எழுப்பி இருப்பார். சட்டமன்றத்தில் மீண்டும் தீர்மானமாக கொடுத்தால் அதற்கு ஆளுநர் கையெழுத்து போட்டு தான் ஆக வேண்டும். இது சட்டம். ஆளுநர் கையெழுத்து போட்டு அமலுக்கு வந்தால், அதற்கு  நீதிமன்றத்தில் தடை உத்தரவு ஆக வாய்ப்பு இருக்கின்றது.


யாரையோ சமாதானப்படுத்த ஆளுநரை கையெழுத்திட நிர்பந்தம் செய்யாதீர்கள்.  234 எம்எல்ஏக்களும் மறுபடியும் ஆராய்ந்து அதில் இருக்கும் பிரச்சினைகளை விவாதிக்க வேண்டும். ஆளுநர் சும்மா திருப்பி அனுப்ப மாட்டார். எதாவது விளக்கம் கேட்டு இருப்பார். தமிழக அரசும், சபாநாயகருக்கும் ஆளுநர் எழுப்பி இருக்கும் கருத்தை ஒவ்வொரு தமிழனுக்கும் தெரிந்து கொள்ள அதை வெளியிட வேண்டும். அது தெரிந்து கொள்ளவது கட்டாயமாக இருக்கிறது. அது ஆரோக்கியமான விவாதங்களை ஏற்படுத்தும்.




6 மாதத்தில் பெரிய தலைகள்:


தினமும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வேறு வேறு கட்சியில் இருந்து பாஜகவில் இணைகின்றனர். சிலர் கட்சியில் இணைவதும், வேறு கட்சிக்கு போவதும் சகஜம். இரண்டாம் தர, மூன்றாம் தர, நான்காம் தர தலைவர்கள் வேறு கட்சியில் இணைந்தால், அது பெரிய செய்தியாக வருகிறது என்றால் அதை சீரியஸ் ஆக எடுத்துக் கொள்கின்றனர் என அர்த்தம். திமுகவில் இருக்கும் பாதி அமைச்சர்கள் அதிமுகவில் இருந்து வந்தவர்கள் தான்.


விலகி செல்பவர்கள் போகும் இடத்தில் விசுவாசமாக இருங்கள். அரசியலில் என்ன சாதிக்க வேண்டும் என நினைத்தீர்களோ அதை செய்யுங்கள். பாஜக ஐடி விங்க் என்பது உணர்வுப்பூர்வமாக வேலை செய்யும் இடம். பாஜகவின் அங்கமாக இல்லாதவர்தான் பாதிபேர் இந்த ஐடி விங்க் வேலையை செய்கின்றனர். இன்னும் ஆறு மாதத்தில் பெரிய பெரிய தலைகள் கட்சியில் இருந்து வெளியில் செல்வதற்கும்,  பெரிய பெரிய தலைகள் இங்கு வருவதற்கும் வாய்ப்பு உண்டு. நாளை ஒரு எம்எல்ஏ வந்தால் கூட பாஜக இன்னொரு இடைதேர்தல் வேண்டுமா என யோசிக்கும். புதிய ஆட்களை சேர்ப்பது அகில இந்திய கட்சிக்கு பெரிய விஷயமல்ல. தமிழகத்திற்கு என்ன பயன் என்று யோசித்து செய்கின்றோம்” எனத் தெரிவித்தார்.