Metoo | 'உண்மைன்னா கேஸ் போட்டு அவர உள்ள தள்ள வேண்டியதுதானே?' - மி டூ-வை விளக்கும் இயக்குநர்

சர்வதேச விருதுகள் பெற்ற குறும்பட இயக்குநர் ஜெயச்சந்திரன் ஹாஸ்மி பாலியல் தொல்லைகளுக்கு எதிரான மீ டு என்ற இயக்கத்தை பற்றி விளக்கமாக கூறியுள்ளார்.

Continues below advertisement
சர்வதேச விருதுகள் பெற்ற டூ-லெட் குறும்படம், ஸ்வீட் பிரியாணி போன்ற குறும்படங்களின் இயக்குநர் ஜெயச்சந்திரன் ஹாஸ்மி. திரைப்படங்கள் மற்றும் தமிழ் சினிமா சார்ந்து பல்வேறு விவாதங்களிலும் பங்கேற்று வருகிறார். இவர், தன்னுடைய முகநூல் பக்கத்தில் இன்று பதிவொன்றை இட்டுள்ளார். அதில், "வைரமுத்து விவகாரத்தில் சின்மயி மேல் தொடர்ந்து வைக்கப்படும் கேள்வி: "ஏன் இன்னும் கேஸ் போடல? உண்மைன்னா கேஸ் போட்டு அவர உள்ள தள்ள வேண்டியதுதான? அய்யாமாரே... Me Too இயக்கம் உருவான கதையை காரணத்தை கொஞ்சம் படித்துப் பாருங்கள்.
 
எல்லா சமயங்களிலும் எல்லா தவறுகளுக்கும் வழக்கு போடமுடியாது. சட்டத்திற்கு தேவை ஆதாரங்கள் தான். ஆனால் பெரும்பாலான பாலியல் சுரண்டல்கள் ஆதாரங்களற்ற சாட்சிகளற்ற தனியறையில் நடப்பவை. மேலும் Sexual Harassments நடக்கும்போது அதை உடனடியாக வெளியே சொல்லமுடியாத சூழல்தான் பல இடங்களில் நிலவும். தொந்தரவு கொடுத்த நபரின் அதிகாரம், செல்வாக்கு, தொந்தரவுக்குள்ளாகிய பெண்களின் Survival தேவைகள், குடும்ப சூழல், சமூகக் கண்கள் என பல விஷயங்கள் இதில் உள்ளன.
 
ரோட்டில் உங்கள் பர்ஸை ஒருவன் அடித்துக்கொண்டு போகும்போது, திருடன் திருடன் என்று கத்துவதைப் போல அல்ல இது. அப்படி கத்திய சம்பவங்களும் நடந்துள்ளன. கத்தும் பெண்களும் உள்ளனர். ஆனால் பெரும்பாலும் குறிவைக்கப்படுவது அப்படியல்லாத பெண்கள்தான். எல்லாவற்றையும் விட முக்கியமான விஷயம், ஒரு பெண் பாலியல்ரீதியான சீண்டல்களுக்கு உள்ளானால், நம் சமூகம் அவளை எளிதாக அணுகக்கூடிய, ‘கெட்டுப்போனவளாக’ பார்க்குமே தவிர, சீண்டியவனை ‘கெடுத்தவனாக’ பார்க்காது.

 
பெண்கள் Rape செய்யப்பட்டாலே ‘நீ ஏன் அந்த ட்ரெஸ் போட்டுட்டு போன?’ ‘உனக்கு அந்த நேரத்துல அங்க என்ன வேலை?’ என்று கேட்கும் நாடு இது. ‘நெருப்பு இல்லாமலா புகையும்?’ எனும் டிடெக்டிவ்கள் நிறைந்த ஊர் இது. இதை மீறி ஒரு பெண் அப்போதே புகார் கொடுத்தால் இந்த கூட்டம் என்ன கேட்கும் தெரியுமா? ‘என்ன Proof?’ இதையெல்லாம் ஒரு பெண் எதிர்கொள்ளும்போது ‘ச்சே.. இதுக்கு சொல்லாம மூடிட்டு இருந்துருக்கலாம்’ என்ற எண்ணம்தான் அவளுக்கு ஏற்படும். இது அத்தனையும் ஏற்படுத்த விளையும் எதிர்வினையும் அதுதான். இது எல்லாவற்றையும் தெரிந்துகொண்டே வைக்கப்படும் கேள்விதான் ‘ஏன் அப்பவே சொல்லல? ஏன் கேஸ் கொடுக்கல?’
 
இதுபோன்ற சொல்லமுடியாத சூழலில் நடந்த பாலியல் குற்றங்களை, சொல்லமுடியாத நிலையில் இருந்த பெண்கள், அதை சொல்லத்துணியும் நிலைக்கு வரும்போது, அந்த குற்றவாளிகள் சட்டத்தினால் தண்டிக்கப்படாவிட்டாலும் கூட சமூகத்தினாலாவது தண்டிக்கப்பட வேண்டும் என்பதே மீ டூ இயக்கத்தின் அடிப்படை. அப்படி சீண்டியவன் தன்னோடு நிறுத்தியிருக்க மாட்டான் என்கிற உளவியல்தான் மீ டூ. அப்படி ஒரு கூட்டுக்குரல் மூலம் அவனது முகத்திரையை கிழிப்பதுதான் மீ டூ. இதில் ஆதாரம் கேட்பதோ, ஏன் வழக்கு போடவில்லை என்று கேட்பதோ, சீண்டியவனை பாதுகாப்பதன்றி வேறல்ல! அதையும் மீறி ஏன் அப்பவே சொல்லல, ஏன் வழக்கு போடல என்று உங்களுக்கு கேட்கத் தோன்றினால், உங்கள் மனைவியிடமோ, சகோதரியிடமோ, தோழிகளிடமோ கொஞ்சம் பேசிப்பாருங்கள். ரயில், பேருந்து, அலுவலகம், வீடு என 90 சதவிகிதம் அவர்கள் ஏதோ ஒரு வகையிலான பாலியல் சீண்டல்களுக்கு உள்ளாகியிருப்பார்கள். அவர்களிடம் கேளுங்கள், "ஏன் அப்பவே இத சொல்லல?" புரியும் எனப் பதிவிட்டுள்ளார். 
Continues below advertisement
Sponsored Links by Taboola