கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்பே தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம், கரூர் மாவட்டத்தில் வெயில் சதமடித்தது மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. 


கொளுத்தும் வெயில் 


பருவநிலை மாற்றம் காரணமாக வானிலை மாற்றமானது தொடர்ச்சியாக மாறி மாறி வருகிறது. அந்த வகையில் கோடைக் காலம் தொடங்குவதற்கு முன்னதாகவே வழக்கத்தை விட வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் மக்கள் பகல் நேரத்தில் வெளியே வருவது என்பது குறைந்து விட்டது.






இன்றைய நாளில் (மார்ச் 18) ஈரோட்டில் 101 ஃபாரன்ஹீட்டும், சேலத்தில் 101 ஃபாரன்ஹீட்டும், கரூரில் 100 டிகிரி பாரன்ஹீட்டும் பதிவாகியுள்ளது. அதேபோல் மதுரையில் 99 ஃபாரன்ஹீட், இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி மற்றும் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் 98 ஃபாரன்ஹீட், திருச்சி மற்றும் திருப்பத்தூரில் 97 ஃபாரன்ஹீட் ஆகியவை பதிவாகியுள்ளது. சென்னையை பொறுத்தமட்டில் வழக்கத்தை விட 0.1% குறைந்தும், மீனம்பாக்கத்தில் 0.3% குறைந்தும் வெயில் அடித்தது. 


மேலும் வெயில் காலம் தொடங்கியுள்ளதால் ஆங்காங்கே சாலையோரங்களில் குளிர்பானம், ஜூஸ் கடைகள் முளைத்துள்ளது, மேலும் மக்கள் தண்ணீர் அதிகம் பருக வேண்டும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் வயதானவர்கள், குழந்தைகள் முடிந்தளவு பகல் நேரங்களில் வெளியே செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.