நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், தமிழ்நாட்டில் நாளை முதல் மழை குறையும் என்றும் வானிலை மையம் தகவல் கூறியுள்ளது. 


வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் நெல்லை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் , மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதிகபட்சமாக ஈரோடு, கொடிமுடி, கரூர் ஆனைபாளையத்தில் தலா 9, கோவையில் 7 செ.மீ மழைப்பதிவாகியுள்ளது.


வானிலை மையம் அறிக்கை:


தென் தமிழக பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 05.12.2021: திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் (திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், தர்மபுரி) ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.


06.12.2021: தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் அதனை ஓட்டிய உள் மாவட்டங்களில் (திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், தர்மபுரி) ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.


7.12.2021: தென் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.


8.12.2021: கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.




09.12.2021: கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.


சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அடுகபட்ச வெப்பநிலை 32 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.


மீனவர்களுக்கான எச்சரிக்கை:


மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 6 மணி நேரத்தில் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக ஒடிசா கடற்கரையோரம் நிலைகொள்ளும்.


இதன் காரணமாக 05.12.2021: வட மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகள், ஒடிசா கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.