CM Stalin: முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஒப்பந்தங்கள் கையெழுத்திட்ட நிறுவனங்களுக்கு நன்றி தெரிவித்தார் முதல்வர் ஸ்டாலின்.  


முதலீட்டாளர்கள் மாநாடு:


சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான 3ஆவது முறையாக உலக முதலீட்டாளர் மாநாடு இன்று (டிச.7) காலை தொடங்கியது. தலைமைத்துவம் - Leadership, நீடித்த நிலைத்தன்மை Sustainability, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி -Inclusivity என்ற கருப்பொருள்களில் இந்த மாநாடு நடத்தப்பட்டது. 


விழாவில் 50-க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து வர்த்தக மற்றும் தொழில் நிறுவனங்களின் தலைவர்கள் கலந்து கொண்டனர். இதில் மத்திய தொழிற்துறை அமைச்சர் பியூஷ் கோயல் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.


உலக நாடுகளை உள்ளடக்கிய இந்த நிகழ்வில், அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர், ஜப்பான், தென்கொரியா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, ஜெர்மனி மற்றும் டென்மார்க் ஆகிய 9 நாடுகள் தமிழ்நாட்டு அரசுடன் பங்குதாரர் நாடுகளாக இணைந்துள்ளன.


மேற்கு ஆஸ்திரேலியா மற்றும் தைவான் பொருளாதார மற்றும் கலாச்சார நிறுவனங்களும் இணைந்து செயல்பட்டன. மாநாட்டின் முதல் நாளான இன்று 100-க்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள கையெழுத்திடப்பட்டதாகவும் தொழில்துறைச் செயலர் அருண் ராய் தெரிவித்துள்ளார்.


”பொருளாதார சக்தியாக தமிழ்நாட்டை நிலைநிறுத்துவோம்"


மேலும், ரூ.5.5 லட்சம் கோடி என்ற இலக்கு முதல் நாளிலேயே எட்டப்பட்டதாகவும் அருண் ராய் தெரிவித்துள்ளார்.  இந்த நிலையில், முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஒப்பந்தங்கள் கையெழுத்திட்ட நிறுவனங்களுக்கு நன்றி தெரிவித்தார் முதல்வர் ஸ்டாலின். 






இதுகுறித்து, அவர் பதிவிட்டுள்ள எக்ஸ் தளத்தில்,  ”தமிழ்நாட்டின் ஒரு லட்சம் கோடி டாலர் கனவுக்கான உலகளாவிய பாராட்டுகள் எங்கள் வெற்றிக்கான பயணத்தை தூண்டுகின்றன.  நாட்டின் பொருளாதார சக்தியாக தமிழ்நாட்டை நிலைநிறுத்துவோம்.  


வெற்றிகரமான மாபெரும் நிகழ்வை எதிர்நோக்கி, தமிழ்நாட்டின் எதிர்காலம் செழிக்க சிறந்த முதலீடுகளை எதிர்பார்க்கிறோம்.  உயர்ந்த இலக்கை அடைவோம். அதிக முதலீட்டை ஈர்ப்போம்" என்றார்.  


முன்னதாக, நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ”தொழில் துறையில் மேன்மையும், தனித்த தொழில்வளமும் கொண்ட மாநிலம்தான், தமிழ்நாடு. பண்டைய காலத்தில் இருந்து கடல் கடந்தும் வாணிபம் செய்தவர்கள்! அதனால்தான், "திரைகடல் ஓடியும் திரவியம் தேடு" என்று தொழிலை ஊக்குவிக்கும் பழமொழி உருவானது.


இந்தியாவுக்கு பல்வேறு வகைகளில் தமிழ்நாடு, முன்மாதிரி மாநிலம். 1920-ஆம் ஆண்டு 'தென்னிந்திய வேலையளிப்போர் கூட்டமைப்பு' எனப்படும் தொழிலதிபர்கள் அமைப்பு தொடங்கப்பட்டது. இதனால்தான் தமிழ்நாடு அனைத்து வகைத் தொழில்களிலும், முன்னேறிய மாநிலமாக இன்றைக்கு இருக்கிறது" என்றார்.