இந்தியாவிலேயே பல்வேறு துறைகளில் தமிழ்நாடு முதலிடம் வகித்து வருவதாக, முதலீட்டாளர்கள் மாநாட்டில் தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா பட்டியலிட்டு உள்ளார்.


சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான 3ஆவது முறையாக உலக முதலீட்டாளர் மாநாடு இன்று (டிச.7) தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் 50க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து வர்த்தக மற்றும் தொழில் நிறுவனங்களின் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.


இதில் மத்திய தொழிற்துறை அமைச்சர் பியூஷ் கோயல் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ளார். நிகழ்ச்சியில் தமிழக தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா பேசினார். அப்போது அவர் கூறியதாவது:


’’தமிழ்நாடு செய்திருக்கும் சில சாதனைகளை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இந்தியாவிலேயே இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட மாநிலமான தமிழ்நாடு, பல துறைகளில் முதலிடத்தில் இருக்கிறது. இந்தியாவில் 45 ஆயிரம் தொழிற்சாலைகளுடன், மிகப்பெரிய தொழில் முகமையாகத் தமிழ்நாடு திகழ்கிறது. ஆட்டோ மொபைல், உதிரி பாகங்கள் தயாரிப்பு ஆகியவற்றில் நம்பர் ஒன்னாகத் திகழ்ந்து வருகிறது.


ஆட்டோ மொபைல் துறையின் தலைமையிடம்


ஆட்டோ மொபைல் துறையின் தலைமையிடமாக தமிழ்நாடு இருக்கிறது. அதேபோல டயர் உற்பத்தியிலும் முதலிடத்தில் உள்ளது. மின்னணு பாகங்கள் உற்பத்தியில் 30 சதவீத பங்களிப்பைத் தமிழ்நாடு வழங்கி வருகிறது. ஏற்றுமதியில் கடந்த ஆண்டு 5.37 பில்லியன் டாலர்களை நாம் ஈட்டிய நிலையில், இந்த முறை தற்போதே 5.6 பில்லியன் டாலர்களைக் கடந்துவிட்டோம்.


அதேபோல மின்சார வாகனங்கள் உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது. மின்சார இருசக்கர வாகனங்கள் உற்பத்தியில் 70 சதவீத அளவுக்கும், மின்சார நான்கு சக்கர வாகனங்கள் உற்பத்தியில் 40 சதவீத அளவுக்கும் தமிழ்நாடு பங்கு வகிக்கிறது.


காப்புரிமைகள் பெறுவதிலும் தமிழ்நாடு முன்னிலை


தோல் பொருட்கள் உற்பத்தியில், நாட்டிலேயே முதலிடத்தைப் பிடித்திருக்கிறது தமிழ்நாடு. உலக அளவில் தோல் அல்லாத துறையிலும் சிறப்பிடத்தைத் தமிழ்நாடு வகிக்கிறது. இந்தியாவில் காப்புரிமைகள் பெறுவதிலும் தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது.


இந்தியாவிலேயே பணி செய்யும் பெண்களில் சுமார் 43% பேர் தமிழ்நாட்டில் பணிபுரிகின்றனர். இது உண்மையிலேயே நமக்குப் பெருமை தரும் விஷயம். கல்வி, மருத்துவம் உள்ளிட்ட சமூக கட்டமைப்பிலும் தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது’’.  


இவ்வாறு அமைச்சர் டிஆர்பி ராஜா தெரிவித்தார்.


முன்னதாக மத்திய தொழிற்துறை அமைச்சர் பியூஷ் கோயல் நிகழ்ச்சியில் பேசும்போது, ''மாநிலங்களின் வளர்ச்சியே தேசத்தின் வளர்ச்சி என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அனைத்து மாநிலங்களும் வளர வேண்டும் என்று பிரதமர் கவனம் செலுத்தி வருகிறார். கடந்த 10 ஆண்டுகளாக பொருளாதாரத்தை உயர்த்தக் கடுமையாக சவால்களை எதிர்கொண்டோம்.


பிரதமரின் இதயத்தில் தமிழகத்துக்கெனத் தனி இடம் இருக்கிறது. ஒரு ட்ரில்லியன் டாலர் என்று இலக்கு வைத்து செயல்படும் தமிழ்நாட்டு முதல்வருக்கு வாழ்த்துகள். அவ்வாறு நடந்தால், தமிழ்நாட்டில் வேலைவாய்ப்புகள் பெருகும். மாநிலங்களிடையே ஆரோக்கியமான போட்டி தேவை’’ என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.