தமிழ்நாட்டில் காவிரி நீர் உள்ளிட்ட பல பிரச்னைகள் இருக்கும் நிலையில் முதலமைச்சர் விஜய் தொடர்ச்சியாக மௌனம் காத்து வருவது அரசியல் களத்தில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
முதல்வர் விஜய் முன் சவால்கள்
2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியைப் பிடித்த நிலையில் அக்கட்சியின் தலைவர் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றார். பெரிய அளவில் அரசியல் மற்றும் ஆட்சி அனுபவம் எதுவும் இல்லாவிட்டால், இந்த அரசு மீது மக்களுக்கு மிகப்பெரிய அளவில் நம்பிக்கை இருந்தது. தினமும் அலுவல் பணி மேற்கொள்ள தலைமைச்செயலகம் வருவது தொடங்கி விஜயின் ஒவ்வொரு அசைவும் மக்களால் கவனிக்கப்பட்டு கொண்டே வருகிறது. உள்ளூர் பிரச்னை மூலம் பக்கத்து மாநிலம் பிரச்னைகள் வரை அவர் முன் பல சவால்கள் காத்திருக்கிறது.
உதாரணமாக காவிரி ஆற்றின் நீரை தமிழ்நாட்டிற்கு மாதந்தோறும் வழங்க குறிப்பிட்ட கால அளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதனை சொன்னதுபோல கர்நாடகா அரசு செய்வதில்லை. முந்தைய ஆட்சியில் இருந்தவர்கள் இந்த விவகாரத்தில் கர்நாடக அரசை, மத்திய அரசை கண்டித்து குறைந்தப்பட்சம் சமூக வலைத்தளத்தில் பதிவாவது வெளியிடுவது வழக்கம். அதேபோல் இறைச்சி கழிவுகள் கேரளாவில் இருந்து தமிழக எல்லைக்குள் கொட்டப்படுவது அவ்வப்போது நடந்து வருகிறது.
இதுபோன்ற பிரச்னைகளுக்கு அமைச்சர்கள் கருத்து தெரிவித்தாலும் முதல் ஆளாக பேச வேண்டிய முதலமைச்சர் விஜய் மௌனம் காப்பது நல்லதல்ல என சமூக வலைத்தளங்களில் பதிவுகளைக் காண முடிகிறது. ஜூலை மாதத்தில் தமிழகத்திற்கு கர்நாடகம் 31.2 டி.எம்.சி., நீர் வழங்க வேண்டும். ஆனால் இதுவரை வெறும் 0.52 டி.எம்.சி. மட்டுமே வழங்கியுள்ளது. எனினும் கர்நாடக அரசை கண்டித்து ஒரு அறிக்கை கூட விஜய் பெயரில் வரவில்லை. இப்படி பல பிரச்னைகளில் விஜய் தொடர்ந்து மௌனமாக இருந்து வருகிறார்.
ஆக்டிவாக செயல்பட வேண்டும்
அரசியல் கட்சிகள் தங்கள் தலைவர் பெயர், கட்சி மற்றும் ஐடி விங் பெயர்களில் சமூக வலைத்தளப் பக்கங்களை இயக்கி வருகிறது. மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பல தலைவர்கள் தங்கள் சமூக வலைத்தளப் பக்கங்களில் கருத்து தெரிவிப்பார்கள். இல்லாவிட்டால் கட்சியின் அக்கவுண்டில் சம்பந்தப்பட்டவர்களின் பெயர்களோடு பதிவுகள் வெளியாகும். ஐடி விங் போடும் பதிவுகள் எவ்வித பெயரும் இல்லாமல் இருக்கும்.
ஆனால் தவெக தரப்பில் ஐடி விங் மட்டும் மிகவும் ஆக்டிவாக செயல்படும். ஆனால் அக்கட்சியின் அக்கவுண்டில் இருந்து பதிவுகள் அவ்வப்போது மட்டுமே வெளியாகும். அதுவும் யாருடைய கருத்து என்பதெல்லாம் இருக்காது. விஜயின் தவெக அதிகாரப்பூர்வ கணக்கில் பதிவுகள் வெளியாகி மாதக்கணக்கில் ஆகிறது. அவர் தமிழ்நாடு முதலமைச்சர் அக்கவுண்டை பயன்படுத்தி வந்தாலும் பெரிய அளவில் எதிர்ப்பு கருத்துகள் பதிவாகவில்லை.
Also Read: இன்றே சினிமாவில் கடைசி நாள்.. விலகும் விஜய்.. சோகத்தில் ரசிகர்கள்!
ஜனநாயகன் ரிலீசாக வெயிட்டிங்கா?
இந்த நிலையில் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படம் ஜூலை 23ம் தேதி வெளியாகிறது. இந்த படம் தமிழ் மட்டுமல்லாது மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் வெளியாகிறது. அதேசமயம் ஜனநாயகன் படத்தின் தயாரிப்பாளர் வெங்கட் நாராயணா கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்தவர். இதன் காரணமாக தன் படம் வரும் வரை எதைப்பற்றியும் பேச வேண்டாம் என்ற முடிவில் விஜய் இருக்கிறாரா என்ற கேள்வியை பலரும் எழுப்பி வருகின்றனர்.
கடந்த காலங்களில் ரஜினி, சத்யராஜ் போன்றவர்கள் கர்நாடகா அரசை எதிர்த்து பேசியுள்ள நிலையில், அவர்களின் படம் ரிலீசாகும் நேரத்தில் பிரச்னைகள் எழுந்துள்ளது. இதனால் தங்கள் கருத்துக்கு வருத்தம் தெரிவித்த சம்பவங்களும் நிகழ்ந்துள்ளது. அப்படியாக எதுவும் நிகழ்ந்து விடக்கூடாது என்பதால் காவிரி விவகாரத்தில் விஜய் இதுவரை சட்ட நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட்டாலும் கண்டன அறிக்கைகள் வெளியிடவில்லை.
மேலும் சென்சார் பிரச்னையால் ஜனநாயகன் சிக்கி தவித்த நிலையில், படம் வெளியாகும் வரை மத்திய அரசையும் சைலண்ட் மோடில் தான் தவெக அரசின் முதல்வர் அணுகுகிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நாளை படம் வெளியாகும் நிலையில் அதன்பிறகாவது முதலமைச்சர் விஜய் தன் அணுகுமுறையில் மாற்றத்தைக் கொண்டு வருவாரா என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
