செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, ஆகிய மாவட்டங்களில் 10 ஆண்டுகளுக்கு பின் தேர்தல் நடத்தப்படுவதால் அந்தந்த மாவட்டங்களில் தேர்தல் திருவிழா களைகட்டிவருகிறது. 


ஊராக உள்ளாட்சித் தேர்தலில் பெரும்பான்மை கட்சிகளிடையே போட்டிகள் நிலவி வரும் நிலையில், உறவுகளுக்கு இடையேயான போட்டிகளும் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது. அண்ணன் - தம்பி, அப்பா - மகன் என்று ஒரே கட்சியில் வேட்பாளர்களாக நின்றதை கேள்விபட்டிருப்போம். ஆனால், இந்தத் தேர்தலில் மாமியார் - மருமகள், மகள் - தந்தை போன்றோர் ஒரே பதவிக்கு போட்டியிடுகின்றனர்.


காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்துக்குட்பட்ட ஊத்துகாடு ஊராட்சி தலைவர் பதவிக்கு மாமியா, மருமகள் வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளனர். இந்த பதவிக்கு மருமகள் சாவித்திரி மனுத்தாக்கல் செய்த அதே சமயத்தில், மாமியார் ஜெயலட்சுமி மனுத்தாக்கல் செய்திருப்பது சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது. பல மாமியார், மருமகளுக்கு இடையே வீட்டுக்குள் யார் தலைவி என்று போட்டிகள் நிலவி வரும் சூழலில் ஒரு தலைவர் பதவிக்கு இருவரும் போட்டியிடுவது அந்த பகுதியையே கலகலப்பு ஆக்கியுள்ளது.


இந்தப்போட்டிகள் ஒருபுறமிக்க, மறுபுறம் தந்தை - மகள் இடையே போட்டி உருவாகியுள்ளது. வேலூர் மாவட்டம் காட்பாடி ஒன்றியத்தில் உள்ள ஏரந்தாங்கல் ஊராட்சி தலைவர் பதவிக்கு தந்தை - மகள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். தந்தை முத்துகிருஷ்ணன் நாடாளுமன்றத் தேர்தல், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்துள்ளார். இந்த முறையாவது வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் அவர் களம் காணும் நிலையில், அவருக்கு எதிராக அவரது மகள் செந்தமிழ்ச்செல்வி போட்டியிடுவது அந்த ஊர் மக்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.


தனது தந்தையை எதிர்த்து போட்டியிடுவது குறித்து செந்தமிழ்ச்செல்வி கூறுகையில், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, தனது அப்பா ஆகிய மூன்று வேட்பாளர்களை எதிர்த்து பிரச்சாரம்  செய்ய உள்ள தனக்கு, ஊரக உள்ளாட்சித் தேர்தல் குறித்த புரிதல் உள்ளதாகவும்,  தன்  ஊராட்சியை சார்ந்துள்ள மக்கள் தனக்கு வாக்களித்து வெற்றபெற வைப்பார்கள் எனவும் கூறினார்.




முன்னதாக, “தமிழ்நாட்டில் விடுபட்ட 9 மாவட்டங்களில் இரண்டு கட்டமாக அக்டோபர் 6 மற்றும் 9ஆம் தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும். செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, ஆகிய மாவட்டங்களில் தேர்தல் நடைபெறுகிறது.  28 மாவட்டங்களில் நிரப்பப்படாத 789 இடங்களுக்கு அக்டோபர் 9ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். முதற்கட்ட வாக்குப்பதிவு அக்டோபார் 6ஆம் தேதியும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 9ஆம் தேதி நடைபெறும். காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்காளர்கள் வாக்களிக்கலாம். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மாலை 5 மணி முதல் 6 மணி வரை வாக்களிக்கலாம்.  9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 12ஆம் தேதி நடைபெறும். தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கி, 22ஆம் தேதி முடிவடையும். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை செப்டம்பர் 23ஆம் தேதி நடைபெறும்.செப்டம்பர் 25ஆம் தேதி  வேட்புமனுவை திரும்பப்பெறலாம். 9 மாவட்டங்களுக்கும் தனித்தனியாக ஐஏஎஸ் அதிகாரிகள் பார்வையாளர்களாக நியமிக்கப்படுவார்கள். பணியாளர் பற்றாக்குறை, நிர்வாக காரணங்களால் 2 கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. தேர்தல் பாதுகாப்புப் பணியில் 40,000 காவலர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள்” என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் கூறியிருந்தார்.










 


உள்ளாட்சி உள்ளது உள்ளபடி: காஞ்சிபுரம் மாவட்டத்தில் கால் பதிக்கப் போவது யார்? A to Z களநிலவரம்!