தென்னிந்தியப்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


அதன்படி இன்றும் நாளையும், தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசான  மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென்தமிழக உள் மாவட்டங்கள், ஏனைய  வடதமிழகம்  மற்றும் புதுவையில்  வறண்ட வானிலை நிலவக்கூடும்.


அதேபோல் 28 ஆம் தேதி முதல் மார்ச் 3 ஆம் தேதி வரை,  தமிழகம், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


அதிகபட்ச வெப்பநிலை:


26.02.2024 மற்றும் 27.02.2024: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக  இருக்கக்கூடும். உள்தமிழகத்தில் அதிக வெப்பநிலை  காரணமாக ஓரிரு இடங்களில்  அசௌகரியம் ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான   வானிலை முன்னறிவிப்பு:


அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


மீனவர்களுக்கான எச்சரிக்கை:


தமிழக கடலோரப்பகுதிகள்:


26.02.2024 மற்றும் 27.02.2024: குமரிக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மன்னார்    வளைகுடா, தென்தமிழக   கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்.