தமிழ்நாட்டில் அடுத்த சில தினங்களுக்கு வறண்ட வானிலை நிலவக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


21.02.2023 முதல் 25.02.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:


அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.  அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸ் மற்றும்  குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியசை ஒட்டி  இருக்கக்கூடும்.


கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு மற்றும் மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவுமில்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


காலை நேரத்தில் வெயிலின் தாக்கம் தற்போது அதிகரித்துள்ளது. இருப்பினும் அதிகாலை நேரம் தமிழ்நாட்டில் அநேக பகுதிகளில் கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. மார்ச் மாதம் வர இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் பனியின் அளவு குறைந்தபாடு இல்லை.


சென்னை மற்றும் அதனை ஒட்டியுள்ள திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அதிகாலையில் பனிமூட்டம் அதிகமாக உள்ளது. எதிரே வரும் வாகனங்கள் தெரியாத நிலையில் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு வாகன ஓட்டிகள் செல்ல வேண்டிய சூழல் உள்ளது.


சென்னை அரக்கோணம் இடையிலான ரயில்கள் பனி மூட்டம் காரணமாக ஆங்காங்கே நிறுத்தப்பட்டு செல்கிறது. சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறங்குவதில் கூட தாமதம் ஏற்படுகிறது. இதேப்போல செங்கல்பட்டில் இருந்து சென்னையை நோக்கி வரும் வாகனம் காலை 7 மணியை கடந்த பின்பும் முகப்பு விளக்குகளை எரியவிட்டு வர வேண்டியுள்ளது என்கின்றனர் வாகன ஓட்டிகள்.


பனிமூட்டம் இருப்பதன் காரணம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தலைவர் பாலசந்திரன் கூறுகையில், இரவு நேரங்களில் மேகக்கூட்டங்கள் இல்லாமல் குறைந்த வெப்பநிலை இருப்பதால், பனித்துளிகள் காற்றில் கலந்து பனிமூட்டமாக மாறுகிறது. இதனால் எந்த பாதிப்பும் இல்லை என தெரிவித்துள்ளார். வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் அடுத்த வரும் சில நாட்களுக்கு வறண்ட வானிலையே இருக்கும் என்றும், பனிமூட்டம் படிப்படியாக குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.