140 கோடி மக்கள் இருக்கு நாட்டில் அரசு மூல மட்டுமே அனைத்தையும் சாதிக்க முடியாது. நாடு வளர்ச்சியடை வேண்டுமெனில் ஒவ்வொரு மனிதனும் வளர்ச்சியை நோக்கி ஓட  வேண்டும். கடந்த ஆட்சிக்காலத்தில் இருந்தவர்கள் நம்மை பின்நோக்கி அழைத்துச் சென்றனர் என தமிழ்நாடு ஆளுநர் ரவி கூறியுள்ளார்.


இன்று காலை சென்னை கிண்டியில் இருக்கும் ஆளுநர் மாளிகையில், எண்ணித் துணிக திட்டத்தின் கீழ் தொழில் முனைவோர் மத்தியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி உரையாடினார். 


அப்போது பேசிய அவர், ” உலகில் உள்ள அனைவருக்கும் இரண்டு ஆசைகள் உள்ளன, ஒன்று நம்மை பற்றிய புகழ் அனைவருக்கும் செல்ல வேண்டும் மற்றொன்று நன்றாக சம்பாதிக்க வேண்டும் என்பது. ஆங்கிலேயர்கள் ஆட்சிக்கு பின் இந்தியாவில் அதிக பணம் வைத்து இருந்தாலே அவர்கள் தவறான செயல்கள் மூலம் மட்டுமே பணம் சம்பாதித்து இருப்பார்கள் என்ற பார்வை உருவானது. ஒவ்வொருவருக்கும் பணம் என்பது முக்கியம். அதிக சொத்து சேர்க்க வேண்டும் என்ற பேராசை இல்லாமல் ஒருவர் தன்னுடைய வருமானத்தை அதிகரித்தால் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. பிரச்சினை எங்கு உருவாகிறது என்பதை கண்டறியாமல் பிரச்சினைகள் உருவான பின் அதனை சரி செய்து வந்தோம். ஆனால் இன்று பிரதமர் மோடி பிரச்சினைகளை கண்டறிந்து அதனை சரி செய்து வருகிறார்.


9 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் புது தொழில் முனைவோர் என்பது மிக மிக குறைவாக இருந்தது. இன்று உலகில் 3வது அதிக புதிய தொழில் முனைவோர் உள்ள நாடக உருவாகி உள்ளோம். அதற்கு காரணம் மக்கள் மீது அரசு வைத்த நம்பிக்கை தான்” என கூறியுள்ளார். 


தொடர்ந்து பேசிய அவர், “ மக்கள் மீது நம்பிக்கை வைத்ததன் காரணமாகவே இந்தியா இன்று பொருளாதரத்தில் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. தோல்வியை கண்டு யாரும் அச்சம் கொள்ள வேண்டாம். ஆனால் தோல்விதான் நம்மை வெற்றியை நோக்கி நகர்த்தும். புதிய தொழில் முனைவோர்கள் அனைவரும் தேசத்தின் சொத்துக்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். புதிய தொழில் முனைவோர்கள்-தான் இந்தியாவின் நம்பிக்கை. நமக்கான காலம் நிச்சயம் வரும். இந்தியாவின் வளர்ச்சி பொருளாதார அடிப்படையில் மட்டுமே இருக்க கூடாது. வாடிய பயிரை கண்ட போதேல்லாம் வாடினேன் என வள்ளலார் கூறியுள்ளார் .இப்படிப்பட்ட ஒரு இடத்தில் இருந்து நாம் வந்துள்ளோம். இப்படிபட்ட ஒரு நிலத்தில் வந்த நபர்கள் மற்றவர்களுக்கு தீமை விளைவிக்க மாட்டோம். எனவே நாம் அனைவரும் பாரம்பரியத்தை தெரிந்துகொண்டு அதனை பின்பற்ற வேண்டும்” என பேசியுள்ளார்


மேலும், ஆளுநருக்கு அதிக வேலை இருக்கும் என்று மக்கள் மத்தியில் ஒரு மாயை உள்ளது. ஆனால் எனக்கு அதிக வேலை இல்லை, அதேபோல் நாட்டின் வளர்ச்சியை தடுக்கும் நபர்களை மட்டுமே நான் எதிரியாக நினைக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.