தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு அரசு தயார் நிலையில் இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளது. 


தென்கிழக்கு கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்பொழுது வலு பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தெற்கு வங்க கடலின் மத்திய பகுதிகளில் நிலை கொண்டுள்ளது எனவும் இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறும். அதனைத் தொடர்ந்து மூன்று தினங்களுக்குள் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து புதுச்சேரி தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திரா கடலூர் பகுதிகளை ஒட்டி வரக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் கன முதல் மிககன மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. 


இதையடுத்து, தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு அரசு தயார் நிலையில் இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி,



  • பெருநகர சென்னை மாநகராட்சிக்கு 17 கண்காணிப்பு அலுவலர்களும், இதர மாவட்டங்களுக்கு 43 கண்காணிப்பு அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

  • 1149 தேசிய பேரிடர் மீட்புப் படையினரும், 899 தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையினரும் தயார் நிலையில் உள்ளனர்.

  • 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள், 5093 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இந்தநிலையில் தற்போது தமிழகத்தில் பல மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்த மிக கனமழை எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 


அடுத்த மூன்று நாட்களுக்கு எங்கெல்லாம் மழை..? 


20.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும்.  செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில்  ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.


21.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும். வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருவள்ளூர், சென்னை, இராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, கடலூர்,  அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை,  நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில்  ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.


22.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும்.  திருவள்ளூர், காஞ்சிபுரம், இராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம்,  கடலூர், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, நாமக்கல், சேலம், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில்  ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.