பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் அரசு ஊழியர்கள் சங்கத்தினர் இன்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதால் அன்றாட பணிகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 


தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான ஆட்சி அமைந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில் கடந்த மார்ச் 20 ஆம் தேதி தமிழ்நாடு அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.  இந்த பட்ஜெட் அரசு ஊழியர்கள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால் கடந்த 21 ஆம் தேதி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் அரசு ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தங்களுக்கு தமிழக அரசு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டதாக அவர்கள் தெரிவித்தனர். 


தேர்தல் வாக்குறுதியில் அறிவிக்கப்பட்ட புதிய பென்ஷன் திட்டம் ரத்து, அகவிலைப்படி நிலுவையை உடனே வழங்குவது, காலியாக உள்ள 6 பணியிடங்களை நிரப்ப வேண்டும், தொகுப்பூதியத்தில் பணியாற்றுபவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கம் வேண்டும். இதேபோல் இடைநிலை, முதுநிலை ஆசிரியர்கள் இடையேயான ஊதிய முரண்பாடுகளை களைவது, உயர்கல்விக்கான ஊக்க ஊதியம் வழங்குவது,ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் பணியாளர்கள், பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை முறைப்படுத்த வேண்டும்.  போன்ற கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் தெரிவித்தனர். 


பட்ஜெட்டிலும் இவை தொடர்பான அறிவுப்புகள் வெளியாகததால் அதிருப்தியடைந்த அரசு ஊழியர்கள் சங்கத்தினர் இன்று தமிழ்நாடு முழுவதும் வேலை நிறுத்தம் செய்ய உள்ளனர். இந்த நிகழ்வில் 60க்கும் மேற்பட்ட துறை ரீதியான சங்கங்கள் கலந்து கொள்ளவுள்ளதால் அலுவல் பணிகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


இந்த அடையாள வேலை நிறுத்த போராட்டம் அந்தந்த மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நடைபெறும்  என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் தீர்வு கிடைக்காவிடில் ஏப்ரல் 19 ஆம் தேதி சென்னையில் தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். 


மேலும் படிக்க: AIADMK: அதிமுக பொதுக்குழு, பொதுச்செயலாளர் தேர்தல் வழக்கு.. என்னதான் முடிவு? இன்று தீர்ப்பு வழங்குகிறது உயர்நீதிமன்றம்