கடந்த சில ஆண்டுகளாக அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் ஆகியோர் மீது ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவது அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தின் புதிய டி.ஜி.பி. சைலேந்திர பாபு நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது, “நவீன அறிவியல் வளர்ச்சியில் முக்கிய அங்கமாக விளங்கும் சமூக வலைதளங்கள் மற்றும் ஜனநாயகத்தின் நான்காவது தூணாக கருதப்படும் ஊடங்கங்ககள் மற்றும் பத்திரிகைகள் வாயிலாக பலரும் சமுதாயம், அரசியல் உள்ளிட்டவை சார்ந்த ஆக்கப்பூர்வமான தகவல்களைப் பகிர்ந்து வருகின்றனர். ஆனால், சிலர் சுய விளம்பரத்திற்காக ஊடகம் மற்றும் சமூக வலைதளங்களில் அருவருப்பான மற்றும் அவதூறு செய்திகளை பதிவு செய்து, சட்டம், ஒழுங்கு பிரச்சினையை தூண்டி வருகின்றனர்.


அதிலும் குறிப்பிட்ட சிலர் கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் சொந்த ஆதாயத்திற்காகவும், மக்கள் மத்தியில் பிரபலம் அடைய வேண்டும் என்ற எண்ணத்திலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராகவும், அரசியல் கட்சித் தலைவர்களுக்கு எதிராகவும் தொடர்ந்து மலிவான, தரம் தாழ்ந்த  கருத்துக்களை பரப்பி வருகின்றனர். இத்தகைய அநாகரீகமான பதிவுகள் பொது அமைதியை சீர்குலைப்பதற்கும், குற்றச்செயல்கள் அதிகரிப்பதற்கும் வித்திடுகின்றன.




காவல்துறையைப் பொறுத்தவரை, சமூக வலைதளங்களில் வெளியிடப்படும் கருத்துக்கள் சட்டம் ஒழுங்கிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், கட்சி, சாதி, மதம் சார்ந்த இரு தரப்பினருக்கு இடையே மோதல்களைத் தூண்டும் வகையிலும், பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும் குற்றச்செயல்களை ஊக்குவிக்கும் வகையிலும் அமைந்தால் அதற்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இத்தகைய சட்ட நடவடிக்கைகள காலம் காலமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


இந்தாண்டு மே மாதம் முதல் தற்போது வரையில் மாநிலம் முழுவதும் சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துக்களை பதிவிட்ட நபர்கள் மீது 75 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளில் எல்லை மீறிய அளவில் அவதூறுப் பதிவுகளை மேற்கொண்ட 16 நபர்கள் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.




எனவே, ஊடகம் மற்றும் சமூக வலைதளங்களில் பதிவிடப்படும் கருத்துக்கள், பொது அமைதிக்கும், சட்டம் ஒழுங்கிற்கும் குந்தகம் ஏற்படுத்தும் சூழ்நிலையிலும், அவதூறு செய்தி பரப்புவோர் மீது அளிக்கப்படும் புகார்களில் முகாந்திரம் இருக்கும் பட்சத்தில் மட்டுமே காவல்துறையினர் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.


இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுகஆட்சி பொறுப்பேற்றது முதல் யூ டியூப்பில் ஆபாசமாக பேசி வீடியோ வெளியிட்ட பப்ஜி மதன், கருத்துக்களுடன் உடன்படாதவர்களுக்கு மிரட்டல் மற்றும் அவதூறாக பேசியதற்காக சாட்டை துரைமுருகன், திராவிட  இயக்கத் தலைவர்களை அவதூறாக பேசிய கிஷோர் கே சுவாமி உள்பட சிலர் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.