Udhayanidhi: மு.க.ஸ்டாலினிடம் 40 சீட் கேட்ட உதயநிதி..! ஓகே சொல்வாரா அப்பா?
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் இளைஞரணியைச் சேர்ந்த 40 பேருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலினிடம் உதயநிதி கோரிக்கை வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகிய நிலையில், ஒவ்வொரு கட்சியினரும் தொகுதி பங்கீடு, கூட்டணிப் பேச்சுவார்த்தை, தேர்தல் பரப்புரையில் தீவிரமாக களமிறங்கியுள்ளனர்.
சீட் கேட்ட உதயநிதி:
இந்த நிலையில், ஆளுங்கட்சியான திமுக-வைப் பொறுத்தமட்டில் கூட்டணி பேச்சுவார்த்தை நேற்று தொடங்கப்பட்டுள்ளது. அதேசமயம் திமுக-வின் வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் பணியிலும் திமுக தலைமை தீவிரமாக செயலாற்றி வருகிறது. கடந்த தேர்தலில் திமுக-வில் உள்ளே நுழைந்த உதயநிதி, தற்போது கட்சியின் மிகவும் முக்கியமான முடிவுகளை எடுக்கும் அதிகாரத்தில் இருக்கிறார்.
கட்சியின் இளைஞரணி செயலாளரான அவர், தான் பொறுப்பேற்ற பிறகு இளைஞரணியை மிகவும் வலிமையாக்கியுள்ளார். இதனால், இளைஞரணியினருக்கு இந்த முறை அதிகளவு போட்டியிட வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலினிடம் வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
40 வேட்பாளர்கள் பட்டியல்:
ஏற்கனவே, திமுக பொதுக்கூட்டம் ஒன்றில் மு.க.ஸ்டாலினிடம் மேடையிலே இந்த கோரிக்கையை முன்வைத்த உதயநிதி ஸ்டாலின் இளைஞரணியைச் சேர்ந்த 40 பேருக்கு சட்டசபைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டுகோள் வைத்துள்ளதாகவும், அதற்கான பட்டியலை மு.க.ஸ்டாலினிடம் வழங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
உதயநிதி வழங்கிய பட்டியலில் ஜாேயல், பி.ராஜா, அப்துல் மாலிக், பிரபு, ஆனந்த்குமார், இன்பரகு உள்ளிட்டோர் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மு.க.ஸ்டாலினுக்கு பிறகு கட்சியை உதயநிதி வழிநடத்த உள்ள நிலையில், அவரது கோரிக்கைகளுக்கும், முடிவுகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கவும் கட்சி முடிவு செய்துள்ளது.
சம்மதிப்பாரா ஸ்டாலின்?
வரும் தேர்தலில் உதயநிதியின் வேண்டுகோளுக்கு இணங்க இளைஞரணியின் 40 வேட்பாளர்களுக்கு போட்டியிட மு.க.ஸ்டாலின் வாய்ப்பு வழங்குவாரா? அல்லது திமுக-வின் வழக்கமான சீனியர்களுக்கே இந்த முறையும் வாய்ப்பு வழங்கப்படுமா? என்ற கேள்வி தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
உதயநிதி ஸ்டாலின் ஏற்கனவே இளைஞரணியைச் சேர்ந்தவர்களுக்கு அதிகளவு போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தபோது, மேடையில் இருந்த திமுக மூத்த தலைவர்கள் சிலர் முகம் சுழித்தனர்.
இதனால், உதயநிதி ஸ்டாலின் அளித்த பட்டியலில் தங்களது தொகுதிகளும் இடம்பெற்றுள்ளதா? என்று சீனியர்கள் சிலர் அச்சத்தில் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கள ஆய்வு:
உதயநிதி ஸ்டாலின் இளைஞரணியின் செயலாளராக பொறுப்பேற்ற பிறகு கிளை, பாகம், ஓட்டுச்சாவடி என்று 5 லட்சம் நிர்வாகிகளை நியமிக்கப்பட்டுள்ளனர். உதயநிதி அளித்துள்ள பட்டியலில் இடம்பெற்றவர்களுக்கு வாய்ப்பு வழங்கலாமா? வேண்டாமா? என்பது குறித்தும் தீவிரமாக கள ஆய்வும் நடத்தப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், உதயநிதி அளித்த பட்டியலில் உள்ள நபர்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகளில் ஏற்கனவே உள்ள திமுக வேட்பாளர்களின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.























