உலகம் முழுவதும் கடந்த பல ஆண்டுகளாகவே பருவகால சூழல் மாறுபாடுகளால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதற்கு இந்தியாவும் விதிவிலக்கு அல்ல. தமிழ்நாடு இந்தாண்டு எல்நினோ வறட்சியை எதிர்கொள்ளும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 

Continues below advertisement

மழை குறைவு:

வழக்கமாக தென்மேற்கு பருவமழை இந்த காலகட்டத்தில் நமது அண்டை மாநிலமான கேரளாவில் மிகப்பெரிய அளவில் பொழியும். அதன் தாக்கம் கேரள எல்லையோர தமிழக மாவட்டங்களிலும் எதிரொலிக்கும். ஆனால், கேரளாவில் இந்தாண்டு பெரியளவு தென்மேற்கு பருவமழை பொழியவில்லை. இது தமிழக எல்லையோர மாவட்டங்களிலும் எதிரொலித்துள்ளது.

வறண்ட அணைகள், ஏரிகள்:

தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில் நீர்வளத்துறையின் கீழ் மொத்தம் 90 அணைகள், 14 ஆயிரத்து 141 ஏரிகள் கட்டுப்பாட்டில் உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள மொத்த அணைகளின் மொத்த கொள்ளவு 224 டிஎம்சி ஆகும். கடந்த சில ஆண்டுகளில் கோடை காலங்களில் தமிழ்நாட்டில் மழை வெளுத்து வாங்கியது. ஆனால், கோடை காலத்தில் இந்தாண்டு மழையும் பொழியவில்லை. 

Continues below advertisement

224 டிஎம்சி கொள்ளளவு கொண்ட தமிழ்நாட்டின் அணைகளில் தற்போது 71.2 டிஎம்சி தண்ணீர் மட்டுமே உள்ளது. அதாவது, மொத்த தண்ணீர் கொள்முதல் அளவில் இது வெறும் 31.7 சதவீதம் மட்டுமே ஆகும். பல அணைகளில் நீர்மட்டம் மிக மிக குறைந்த அளவில் உள்ளது.

பரிதாப நிலையில் ஏரிகள்:

அணைகளின் நிலையே பரிதாபமாக உள்ள நிலையில்  ஏரிகளின் நிலை அதைவிட பரிதாபமாக உள்ளது. அதாவது, 14 ஆயிரத்து 141 பாசன ஏரிகளில் ஏற்கனவே 3 ஆயிரத்து 483 பாசன ஏரிகள் வறண்டுவிட்டது. 6 ஆயிரத்து 127 ஏரிகள் வறண்டு விடும் அபாயகரமான கட்டத்தில் உள்ளது. எஞ்சிய ஏரிகளும் போதிய மழைப்பொழிவு இல்லாவிட்டால் அந்த சூழலை எதிர்கொள்ளும்.அணைகள் பலவும் முறையாக தூர்வாரப்படாமல் உள்ளது. அதேபோல, ஏரிகள் பலவற்றின் கரைகள் பலமில்லாமலும், உட்புறம் தூர்வாரப்படாமலும் உள்ளது.

நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு?

தமிழ்நாட்டில் இந்தாண்டு முறையாக மழைப்பொழிவு இருக்காது என்று வானிலை நிபுணர்கள் கணித்துள்ள நிலையில், கைவசம் இருக்கை முறையாக சேமிக்காவிட்டால் தமிழகம் மிகப்பெரிய நெருக்கடியைச் சந்திக்கும் அவலம் உண்டாகும். வடகிழக்கு பருவமழையையே தமிழ்நாடு பிரதானமாக சார்ந்து இருக்கும் சூழலில், பருவமழை காலம் வரை தண்ணீர் தட்டுப்பாடு இல்லாத சூழலை உருவாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

வடகிழக்கு பருவமழையும் பொய்த்துபோனால் தமிழ்நாடு இந்தாண்டு கடுமையான வறட்சியை சந்திக்கும் அபாயம் உருவாகலாம் என்று பலரும் அச்சப்படுகின்றனர். ஏனென்றால், அணை, ஏரிகள் ஆகியவற்றை நம்பியே பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாயம் நடந்து வருகிறது. வறட்சியான சூழல் உண்டானால் பொதுமக்கள் அனைவரும் குடிநீர் தட்டுப்பாட்டைச் சந்திக்கும் சூழலும் உருவாகலாம் என்ற அச்சமும் உருவாகியுள்ளது. 

தமிழ்நாட்டில் தருமபுரி, அரியலூர், திண்டுக்கல், நாமக்கல், கிருஷ்ணகிரி, நீலகிரி, பெரம்பலூர், திருச்சி, ராமநாதபுரம், திருப்பத்தூர், வேலூர், விருதுநகர் மாவட்டங்களில் கடுமையான வறட்சி இந்தாண்டு ஏற்படும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.