கொரோனா தடுப்பு பணிகளுக்கு நிதி அளிக்கும் சிறுவர்களுக்கு திருக்குறள் பரிசு - முதல்வர் அறிவிப்பு

தமிழகம் மற்றும் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய்த் தொற்று மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.

ABP NADU Last Updated: 29 May 2021 06:49 AM

Background

2020 ஆம் ஆண்டு மத்தியிலிருந்தே, அனைத்து முக்கிய சர்வதேச தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களுடன், மத்திய அரசு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. பைசர், ஜே அண்டு ஜே மற்றும் மாடர்னா போன்ற நிறுவனங்களுடன் பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன. அந்த நிறுவனங்கள்...More

கொரோனா தடுப்பு பணிகளுக்கு நிதி அளிக்கும் சிறுவர்களுக்கு திருக்குறள் பரிசு - முதல்வர் அறிவிப்பு

தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளில் மாநில அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. ஆக்சிஜன் பற்றாக்குறை, ரெம்டெசிவிர் மருந்து, படுக்கை வசதிகள் போன்ற காரணங்களுக்காக பொதுமக்கள் தங்களால் இயன்ற நிதியுதவியை அளிக்க வேண்டும் என்று புதியதாக பொறுப்பேற்றுக் கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக மக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். அவரது வேண்டுகோளுக்கு இணங்க, தொழில் அதிபர்கள், அரசியல் கட்சிகள், தலைவர்கள், பிரபலங்கள் என அனைத்து தரப்பினரும் தொடர்ந்து நிதி அளித்து வருகின்றனர். மேலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பள்ளி மாணவர்கள் தாங்கள் உண்டியலில் சேர்த்த சிறு சேமிப்புகளையும் கொரோனா தடுப்பு பணிகளுக்காக முதல்வர் நிவாரண நிதிக்கு அனுப்பி வருகின்றனர். அந்த குழந்தைகளை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசின் சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இன்று வெளியிடப்பட்டுள்ள தமிழக அரசின் அறிவிப்பில் கூறியிருப்பதாவது, “தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று பேரிடரின் தாக்கத்தில் இருந்து தமிழ்நாட்டை மீட்டெடுக்க, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அனைத்து தரப்பினரும் தாராள நிதி வழங்க உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தேன். அதனை ஏற்று பெரும் தொழிலதிபர்கள், நடுத்தர, சிறு, குறு தொழில் நடத்துவோர், திரையுலகினர், சமூகத்தில் வசதி படைத்தவர்கள் முதல் ஏழை, எளிய சாமான்ய மக்கள் வரை அனைத்து தரப்பினரும், பெருந்தொற்றை முறியடித்தே தீர வேண்டும் என்ற பேரார்வத்துடனும், பேரன்புடனும் தங்களால் இயன்ற நிதியை இன்முகத்துடன் வழங்கி வருகிறார்கள் என்பதை அறிவீர்கள். இதில், தங்களின் சின்னஞ்சிறு கனவுகளை அடைவதற்காக சிறுகச்சிறுகச் சேமித்து வைத்திருக்கும் சேமிப்பை வழங்க முன்வரும் பிஞ்சு உள்ளங்களின் பெருங்கருணை, என் நெஞ்சத்தை நெகிழ வைக்கிறது. எனவே, கொரோனா துயர் துடைக்க முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்காக தங்கள் சேமிப்பை வழங்க முன்வரும் சிறார்கள், சிறுமியர்கள் உள்ளிட்ட பிள்ளைச் செல்வங்கள் அனைவருக்கும் தமிழ்நாடு அரசின் சார்பில், உலகப் பொதுமறை திருக்குறள் நூல் ஒன்று அனுப்பி வைக்கப்படும் என்பதை தெரிவிக்கிறேன். திருவள்ளுவரின் குறள் நெறிக்கு இணங்க, இளம் உள்ளங்களில் ஈகைப் பண்பையும், சக மனிதர்களையும் நேசிக்கும் அன்புணர்வையும் விதைத்திடும் நோக்கத்துடன் இந்த அறிவிப்பை வெளியிடுகிறேன்.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.