இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தனது 42வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்தநிலையில், எம்.எஸ். தோனியின் பிறந்தநாளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், “முன்னாள் இந்திய கேப்டன் மற்றும் என்றென்றும் தல தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். 






சாதாரண பின்னணியில் இருந்து வந்தவர்களுக்கு உங்கள் சாதனைகள் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தோனியின் சாதனைகள் எண்ணற்ற இளைஞர்களுக்கு ஊக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தன்னிகரற்ற தலைமை பண்பு அனைவருக்கும் ஊக்கம் அளிக்க தோனி தனது பணியை தொடர வேண்டும். தொடர்ந்து நீங்கள் பிரகாசிக்கவும், உங்கள் ஒப்பற்ற தலைமை பண்புகள் அனைவரையும் ஊக்குவிக்கும்” என பதிவிட்டு இருந்தார். 


சென்னையும் தோனியும்:


சென்னை அணி கேப்டன் தோனிக்கும், தமிழ்நாடு தலைநகர் சென்னைக்கும் எப்போதும் சிறந்த பந்தம் ஒன்று உள்ளது. 2008ஆம் ஆண்டு முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் எம்.எஸ் தோனி விளையாடி வருகிறார். இவருக்கு சென்னையில் சென்னை ரசிகர்களால் எப்போதும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சூழலில் தோனிக்கு சென்னையை மிகவும் பிடிக்க காரணம் என்ன?


சென்னை வரும்போது எல்லாம் எம்.எஸ். தோனி ஒரு பைக் எடுத்து கொண்டு சென்னையிலுள்ள பல்வேறு இடங்களுக்கு பைக் மூலம் சுற்றி பார்த்துள்ளதாக தெரிகிறது. அப்போது முதல் அவருக்கு சென்னை மீது மிகுந்த காதலும், இனம் புரியாத அன்பும் ஏற்பட்டுள்ளது. அது தான் அவருக்கு நாளடைவில் சென்னை மிகவும் பிடிக்க முக்கிய காரணமாக அமைந்துள்ளது. 


2013ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு எதிராக சென்னையில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் தோனி இரட்டை சதம் விளாசி அசத்தினார். சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானம் அவருக்கு ஒரு உள்ளூர் ஆடுகளம் போல் மாறியது. சென்னைக்கு எப்போதும் எல்லாம் தோனி வருகிறாரோ அப்போது அவருடைய ரசிகர்கள் பெரிய திருவிழா போல் கொண்டாடி தீர்ப்பர். 


இந்தாண்டு ஓய்வா?


கேப்டன் கூல் என்று அழைக்கப்படும் எம்.எஸ். தோனி களத்தில் மட்டுமல்லாமல் ஓய்வு அறிவிப்பதிலும் தனக்கு என்று ஒரு தனி பாணியை வைத்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலிய தொடருக்கு நடுவில் திடீரென்று ஓய்வை அறிவித்தார். அதேபோல் ஒருநாள் போட்டிகளிலிருந்து திடீரென்று கடந்த 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி ஓய்வை அறிவித்தார். அந்த வகையில் தற்போது வருகின்ற ஐபிஎல் போட்டியிலும் இதே பாணியை கடைப்பிடிப்பார் என்று கருதப்படுகிறது. தோனி என்பவர் இந்திய கிரிக்கெட்டில் ஒரு சகாப்தம். அவருடைய சகாப்தம் ஒரு முடிவு அல்ல அது பல புதிய சகாப்தங்களின் தொடக்கமாக இருக்கும் என்பதில் எந்தவித மாற்றமுமில்லை. பிறந்தநாள் வாழ்த்துகள் ’தல’ தோனி...!