தமிழ்நாட்டில் இறுதி வாக்காளர் பட்டியலை தமிழ்நாடு  தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வெளியிட்டுள்ளார். 


இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகிறது. முக்கியமாக வாக்காளர் பட்டியல் பணிகள் தேர்தல் ஆணையம் தரப்பில் மேற்கொள்ளப்பட்டது. இதற்காக சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டது. இந்திய தேர்தல் ஆணைய அறிவுறுத்தல்படி, ஆண்டுதோறும் ‘சிறப்பு சுருக்கமுறை திருத்தம்’ எனப்படும், வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் செப்டம்பர் அல்லது அக்டோபரில் நடைபெறும். இதைத் தொடர்ந்து, ஜனவரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். ஜனவரி 1-ம் தேதியை தகுதி நாளாக கொண்டு, 18 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள்.  அந்த வகையில் இந்த ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் அக்டோபர் மாதம் மேற்கொள்ளப்பட்டது. அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. 


வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்கம் செய்ய, முகவரி மாற்றம் மற்றும் திருத்தம் செய்வதற்கான மனுக்கள் அன்று முதல் பெறப்பட்டன. டிசம்பர் 9 ஆம் தேதி வரை வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளுக்கான விண்ணப்பங்கள் நேரடியாகவும், ஆன்லைன் வாயிலாகவும் பெறப்பட்டன. இந்த மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு, இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணி நடைபெற்றது. முதலில் ஜனவரி 5 ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுவதாக இருந்தது. ஆனால் தென் மாவட்டங்கள் மற்றும் சென்னையில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டதால இது தாமதமாகின. அதன்படி இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. 


தமிழ்நாட்டில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை  6,18,9,0348 ஆகும். அதில் ஆண்கள் - 3,03,96,330, பெண்கள் - 3,14,85,724, மூன்றாம் பாலினம் - 8,294 பேர் உள்ளனர். அதிகபட்சமாக சோழிங்கநல்லூர் சட்டப்பேரவை தொகுதியில்  6,60,419 பேரும், கேவை மாவட்டம் கவுண்டம்பாளையம் சட்டப்பேரவை தொகுதியில் 4,62,612 பேரும் அடங்குவர். குறைந்தபட்ச வாக்காளர்கள் நாகை மாவட்டம் கீழ்வேளூர் - 1,72,140 உள்ளனர். அதனை தொடர்ந்து சென்னை துறைமுகம் 1,72,624 ஆகும். வெளிநாட்டில் இருக்கும் தமிழ்நாடு வாக்காளர்களின் எண்ணிக்கை 3480 பேர் ஆகும். மாற்று திறனாளிகள் 4,32,805 பேர் உள்ளனர். இதனை தமிழ்நாடு தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டது.