Tamil Nadu Cabinet Meeting: தமிழ்நாடு அரசின் இன்றைய அமைச்சரவை கூட்டத்தில், பல்வேறு முக்கிய முடிவுகள் எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம்:


தமிழ்நாடு அரசு ஏற்கனவே அறிவித்தபடி, முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெறுகிறது. அதன்படி, சென்னை தலைமை செயலகத்தில் உள்ள அமைச்சரவை அறையில் காலை 11 மணியளவில் இந்த ஆலோசனைக் கூட்டம் தொடங்கியுள்ளது. இதில் பல்வேறு முக்கிய விவகாரங்கள் தொடர்பாக விவாதிக்கப்படும் எனவும், அதைதொடர்ந்து அரசு சார்பில் முக்கிய முடிவுக வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 


முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா?


கடந்த 7 மற்றும் 8ம் தேதிகளில் சென்னை நந்தம்பாக்கத்தில், உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. அதில் மேற்கொள்ளப்பட பல்வேறு ஒப்பந்தங்கள் மூலம் 6 லட்சத்து 64 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்கள் ஈர்க்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த முதலீடுகள் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள இருப்பதாக அறிவிப்பு வெளியானது. அதன்படி, வரும் 28ம் தேதி முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் தொடங்க உள்ள சூழலில், இன்றைய அம்மைச்சரவை ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் முதலமைச்சர் தமிழ்நாட்டில் இல்லாத சூழலில் சட்ட-ஒழுங்கை பாதுகாப்பது, பிரச்னைகளை கையாள்வது போன்ற பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளது. அதோடு, மக்கள் நலதிட்டங்கள் தொடர்பாகவும் விவாதிக்கப்படும் என கூறப்படுகிறது. முதலமைச்சர் ஸ்டாலின் வெளிநாடு செல்லும்போது சில தொழில் நிறுவனங்களுடன் தமிழக அரசு சார்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன. அந்த நிறுவனங்கள் குறித்தும், அவர்களுக்கு தமிழகத்தில் தொழில் தொடங்க அனுமதி அளிப்பது குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்படுகிறது.


சட்டப்பேரவை கூட்டத்தொடர்:


ஒவ்வொரு ஆண்டு தொடக்கத்திலும் ஜனவரி மாதம் தமிழக சட்டப்பேரவை கூட்டம், ஆளுநர் உரையுடன் தொடங்கும். ஆனால் நடப்பாண்டில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு, பிரதமர் மோடி தமிழகம் வருகை மற்றும் முதலமைச்சரின் வெளிநாடு பயணம் ஆகிய காரணங்களால் சட்டப்பேரவை கூடுவது தாமதமாகி வருகிறது. இந்நிலையில் இன்று நடைபெறும் தமிழக அமைச்சரவை கூட்டத்தில், தமிழக சட்டப்பேரவை கூட்டம் மற்றும் ஆளுநர் உரை குறித்து முக்கிய விவாதம் நடத்தப்பட்டு முடிவு எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.


முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம்:


வரும் 28ம் தேதி சென்னையில் இருந்து புறப்படும் முதலமைச்சர் ஸ்டாலின்  ஸ்பெயின், ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு செல்கிறார். அந்த பயணத்தை முடித்துக் கொண்டு பிப்ரவரி முதல் வாரம் தான் அவர் சென்னை திரும்புகிறார். இந்த பயணத்தின் போது அவர் மருத்துவ சிகிச்சை பெற உள்ளதாகவும், சில உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. அதனால், முதலமைச்சர் ஸ்டாலின் வருகைக்குப் பிறகு தமிழக சட்டப்பேரவை கூட்டம் வருகிற பிப்ரவரி மாதம் 2வது வாரம் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.