அதிமுக வழியில் அண்ணாமலை.. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணிக்கும் பாஜக!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மீண்டும் கால்நடைகளைப் போலப் பொதுமக்களை அடைத்து வைக்க திமுகவை அனுமதிக்கத் தேசிய ஜனநாயகக் கூட்டணி விரும்பவில்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

அதிமுக, தேமுதிக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை தொடர்ந்து பாஜகவும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், "கடந்த நான்கு ஆண்டுகளாக, தமிழகத்தில் நடைபெற்று வரும் மக்கள் விரோத ஆட்சியைப் பார்த்து வருகிறோம்.

Continues below advertisement

எல்லா துறைகளிலும் ஊழல், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, வேலைவாய்ப்பின்மை, பெண்கள், குழந்தைகள், முதியவர்கள், அரசு அதிகாரிகள், காவல்துறையினர் என யாருக்குமே பாதுகாப்பின்மை என, தமிழகம் ஒரு இருண்ட காலத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறது.

"Disaster மாடல் அரசு"

சட்டமேதை அம்பேத்கர், நமக்கு வழங்கிய அரசியல் சாசன சட்டத்திற்கு நேர் எதிராகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது திமுக அரசு. இந்த ஆட்சியின் அவலங்களைத் தினந்தோறும் சகித்துக் கொண்டுள்ள மக்கள், இது திராவிட மாடல் இல்லை, Disaster மாடல் என்று உரக்கச் சொல்லத் துவங்கிவிட்டனர்.

ஈரோடு கிழக்கு தொகுதியைப் பொறுத்தவரை, நடைபெறவிருப்பது, இடைத் தேர்தலுக்கான இடைத் தேர்தல். கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத் தேர்தலின்போது, பொதுமக்களைப் பட்டியில் அடைத்து வைத்துக் கொடுமைப்படுத்தியதைப் பார்த்தோம்.

ஆளுங்கட்சி என்ற அதிகார மமதையில், திமுக, தேர்தல் விதிமுறைகளை எல்லாம் மீறிச் செயல்பட்டதை நாம் அனைவருமே எதிர்கொண்டோம். வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல், திமுகவை முழுமையாக அகற்றவிருக்கும் தேர்தல். அந்த இலக்கை நோக்கியே, தேசிய ஜனநாயகக் கூட்டணி தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

இதன் நடுவே, இடைத்தேர்தலில் மீண்டும் கால்நடைகளைப் போலப் பொதுமக்களை அடைத்து வைக்க திமுகவை அனுமதிக்கத் தேசிய ஜனநாயகக் கூட்டணி விரும்பவில்லை. மக்கள் நலன் விரும்பும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரும் நன்கு கலந்தாலோசித்த பிறகு, ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலை, தேசிய ஜனநாயகக் கூட்டணி புறக்கணிப்பதாக முடிவெடுத்துள்ளோம். 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுகவை அகற்றி, மக்களுக்கான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நல்லாட்சியை வழங்குவதே எங்கள் இலக்கு" என குறிப்பிட்டுள்ளார். 

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்:

கடந்த 2021ஆம் ஆண்டு பொதுத்தேர்தலின் போது ஈரோடு கிழக்கு தொகுதி, திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. அதில், ஈ.வெ.ரா. திருமகன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால், திடீர் உடல்நலக்குறைவு காரணமாக அவர் உயிரிழக்கவே, 2023ம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலிலும் காங்கிரஸ் கட்சிக்கே அந்த தொகுதி ஒதுக்கப்பட்டது.

இதில் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பெரும் சோகமாக உடல்நலக்குறைவு காரணமாக, கடந்த ஆண்டு அவரும் உடல்நலக்குறைவால் காலமானார். இந்த சூழலில், மீண்டும் இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியானதால், கூட்டணி கட்சியான காங்கிரசுக்கே அந்த தொகுதி மீண்டும் ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அதில் முக்கிய திருப்பமாக திமுகவே இந்த இடைத்தேர்தலில் நேரடியாக களம் காணும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, திமுக கொள்கை பரப்பு துணை செயலாளரான வி.சி. சந்திரகுமாரை வேட்பாளராக அக்கட்சி அறிவித்தது.

Continues below advertisement