திருவண்ணாமலை அடுத்த அனக்காவூர் ஒன்றியத்தில், சிப்காட் 3ஆவது அலகை விரிவாக்கம் செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளது. இதற்காக, மேல்மா, குரும்பூர், காட்டுகுடிசை, நர்மாபள்ளம், நெடுங்கல், தேத்துறை, வட ஆளாய் பிறந்தான், இளநீர் குன்றம், அத்தி, மணிபுரம், மற்றும் வீரம்பாக்கம் உள்ளிட்ட 11 கிராமங்களிலிருந்து 3,174 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது.


சிப்காட் விரிவாக்கத்திற்கு விவசாயிகள் எதிர்ப்பு:


இந்த நிலத்தை தரிசு நிலம் என அரசு தரப்பு சொல்லி வருகிறது. ஆனால், அரசு தரப்புக்கு மறுப்பு தெரிவித்துள்ள விவசாயிகள், இது தரிசு நிலம் கிடையாது என விளக்கம் அளித்துள்ளனர். இது, விவசாய நிலம் என்று கூறி வரும் திருவண்ணாமலை விவசாயிகள், சிப்காட் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக 72 நாட்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தையும் அவர்கள் முன்னெடுத்தனர். 


ஆனால், அரசு தரப்பில் இருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை. இருந்தபோதிலும், 125 நாட்கள் கடந்தும் தற்போது வரை விவசாயிகள் போராட்டத்தை நடத்தி வந்தனர். இப்படிப்பட்ட சூழலில், அவர்களுக்கு எதிராக கடந்த ஆகஸ்ட் மாதம் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில், கடந்த நவம்பர் 4ஆம் தேதி, விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.


இந்திய தண்டனை சட்ட பிரிவுகள் 147, 341, 143, 294(b), 353, 506(1) ஆகியவற்றின் கீழ் விவசாயிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையே, தங்களுக்கு ஜாமீன் வழங்கக் கோரி விவசாயிகள் தரப்பு, திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஜாமீன் மனுவை முதன்மை அமர்வு நீதிபதி பி. மதுசூதனன் விசாரித்தார்.


தமிழ்நாடு அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை:


இன்றைய விசாரணையின்போது, "காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 7 விவசாயிகள் மீது குண்டர் சட்டத்தை பதிவு செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக" தமிழ்நாடு அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது. குண்டர் சட்டத்தை பதிவு செய்ய நடவடிக்கை எடுத்து வருவதால் ஜாமீன் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தரப்பு வழக்கறிஞர் கே.வி. மனோகரன், நீதிபதியிடம் தெரிவித்தார். இதை தொடர்ந்து வழக்கின் விசாரணை நவம்பர் 20ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.


விவசாயிகள் மீது குண்டர் சட்டத்தை பதிவு செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்ததற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.


பொங்கி எழுந்த அண்ணாமலை:


அந்த வகையில், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட கண்டனத்தில், "திருவண்ணாமலை மாவட்டத்தில் சிப்காட் அமைக்க 3,200 ஏக்கர் விவசாய நிலத்தை கையகப்படுத்தும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 125 நாட்களாக விவசாயிகள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். 


தமிழ்நாடு முழுவதுமே தொடர்ந்து விவசாயிகளுக்கு எதிரான போக்கில் செயல்பட்டு வரும் திமுக அரசு, அமைதியாகப் போராடும் திருவண்ணாமலை விவசாயிகளை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து, இதற்கு மேலும் திமுக அரசால் தரம் தாழ்ந்து போக முடியாது என்ற எங்கள் எண்ணத்தைத் தவறென நிரூபித்துள்ளனர்.


திமுக அரசின் இந்த கோழைத்தனமான செயலை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்த பாசிச திமுக அரசிடம் இருந்து, போராடும் விவசாயிகளை பாதுகாக்க அவர்கள் குடும்பங்களுக்கு முழு ஆதரவையும் சட்ட உதவியையும் தமிழ்நாடு பாஜக வழங்கும் என்ற உறுதியை அளிக்கிறோம்" என எக்ஸ் வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளார்.