2026 தமிழ்நாடு தேர்தல்: காஞ்சிபுரம் வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு! வாக்குப்பதிவு, விதிமுறைகள் & உதவி எண்கள் இதோ!
Kanchipuram Election 2026: "தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது."

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்-2026 - தேர்தல் அட்டவணை
இந்திய தேர்தல் ஆணையம், தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026-க்கான அறிவிப்பை கீழ்கண்டவாறு வெளியிடப்பட்டுள்ளது.
| வேட்பு மனு தாக்கல் துவங்கும் நாள் | 30.03.2026 |
| வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் | 06.04.2026 |
| வேட்பு மனுக்கள் பரிசீலனை | 07.04.2026 |
| வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற கடைசி நாள் | 09.04.2026 |
| வாக்குப் பதிவு நாள் | 23.04.2026 |
| வாக்குகளை எண்ணும் நாள் | 04.05.2026 |
| தேர்தல் நடைமுறைகள் முடிவுக்கு வரும் நாள் | 06.05.2026 |
காஞ்சிபும் மாவட்ட தொகுதிகள்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 28 – ஆலந்தூர், 29 – திருப்பெரும்புதூர் (தனி), 36 – உத்திரமேரூர் மற்றும் 37 – காஞ்சிபுரம் உட்பட 4 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இறுதி வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்காளர்களின் எண்ணிக்கை கீழ்கண்டவாறு.
- 28 – ஆலந்தூர் சட்டமன்ற தொகுதியில் 296052 வாக்காளர்களும், 431 வாக்குச்சாவடி மையங்களும் உள்ளன.
- 29 – திருப்பெரும்புதூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் 375921 வாக்காளர்களும் 435 வாக்குச்சாவடி மையங்களும் உள்ளன. (11 துணை வாக்கு சாவடிகள் ஏற்படுத்த அறிக்கையானது தலைமை தேர்தல் ஆணையத்திற்கு ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட உள்ளது.)
- 36 – உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதியில் 243922 வாக்காளர்களும் 321 வாக்குச்சாவடி மையங்களும் உள்ளன.
- 37 – காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதியில் 276299 வாக்காளர்களும் 358 வாக்குச்சாவடி மையங்களும் உள்ளன.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேர்தல் கண்காணிப்பிற்காக 12 பறக்கும் படை குழுக்கள் (Flying Squads) மற்றும் 12 நிலையான கண்காணிப்பு குழுக்கள் (Static Surveillance Teams) அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் செயல்பட்டு வருகின்றன. இக்குழுக்கள் வாகன சோதனை, பணப்பரிமாற்ற கண்காணிப்பு மற்றும் தேர்தல் நடத்தை விதிமீறல்கள் தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
பொதுமக்கள் தேர்தல் நடத்தை விதிகளை கடைபிடித்து எதிர்வரும் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல், 2026 அமைதியாக நடந்திட தங்களது ஒத்துழைப்பினை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
- பொதுமக்கள் ரூ.50,000/-க்கும் அதிகமான தொகை மற்றும் ரூ.10,000/- க்கு மேல் உள்ள மதிப்பிலான பொருட்கள் எடுத்து செல்லும் பொழுது உரிய ஆவணங்களுடன் செல்ல அறிவுறுத்தப்படுகின்றனர். பறக்கும் படையினரின் சோதனையின் போது மேற்படி ஆவணங்களை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்படுகிறது. பறக்கும் படை குழுக்கள் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுக்களால் கைபற்றப்பட்ட பொருள் மற்றும் பணம் உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கும் பட்சத்தில் 7 நாட்களுக்குள் திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.
- 24 மணி நேரமும் செயல்படும் மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் பொதுமக்களிடமிருந்து தேர்தல் தொடர்பான புகார்கள் மற்றும் தகவல்களை பெறுவதற்காக, மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில், மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள், அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் தேர்தல் நடத்தை விதி மீறல்கள் அல்லது தேர்தல் தொடர்பான ஏதேனும் புகார்கள் இருப்பின்,
கீழ்க்கண்ட தொலைப்பேசி எண்கள் மூலமாக கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொள்ளலாம்.
| வ. எண் | அலுவலகம் | தொலைபேசி எண்கள் |
| 1 | மாவட்ட ஆட்சியர் அலுவலகம், காஞ்சிபுரம் | 044- 27238025 044- 27238026 044- 27238027 044- 27238028 044- 27238029 |
| 2 | வட்டாட்சியர் அலுவலகம் ஆலந்தூர் | 044 22320580 |
| 3 | வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், திருப்பெரும்புதூர் | 044 27162230 |
| 4 | மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலகம், காஞ்சிபுரம் | 044 27239299 |
| 5 | சார் ஆட்சியர் அலுவலகம், காஞ்சிபுரம் | 044 27237081 |
மேலும், தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க 1950 மற்றும் 1800–425–7087 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்களையும் பயன்படுத்தலாம்.
- பொதுமக்கள் தங்களது வாக்குச்சாவடி நிலையங்கள் பற்றி தெரிந்துக்கொள்ள 1950 அணுகி தகவல்களை பெற்றுக்கொள்ளலாம்.
- இந்திய தேர்தல் ஆணையம் உருவாக்கியுள்ள சி-விஜில் (C-Vigil) மொபைல் செயலி மூலம் தேர்தல் நடத்தை விதிமீறல்கள் தொடர்பான புகார்களை பொதுமக்கள் பதிவு செய்யலாம் என அறிவுறுத்தப்படுகிறது. இச்செயலி மூலம் தேர்தல் நடத்தை விதிமீறல்கள் குறித்து புகைப்படம் அல்லது காணொளி ஆதாரங்களுடன் பொதுமக்கள் எளிதாக புகார் அளிக்கலாம். சி-விஜில் செயலியின் மூலம் பெறப்படும் புகார்கள் சம்பந்தப்பட்ட பறக்கும் படை குழுக்கள் மற்றும் அமலாக்க அதிகாரிகளால் உடனடியாக சரிபார்க்கப்பட்டு, இந்திய தேர்தல் ஆணையத்தின் தேர்தல் சட்டங்கள் மற்றும் வழிகாட்டுதலின்படி தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
- தேர்தல் பணிகளை சிறப்பாக மேற்கொள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனைத்து துறை அலுவலர்கள் உட்பட மொத்தம் 11610 அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
- தேர்தல் நடைபெறும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர்களுக்கு தேவையான உறுதி செய்யப்பட்ட குறைந்தபட்ச வசதிகள் (AMF) ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் குடிநீர் வசதி, மின்விளக்கு வசதி போன்ற வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. வாக்காளர்கள் சிரமமின்றி வாக்களிக்க வரிசையில் காத்திருக்க தற்காலிக நிழற்குடை / ஷெட்டு வசதியும் செய்யப்பட்டுள்ளன. ஆண் மற்றும் பெண் வாக்காளர்களுக்காக தனித்தனி கழிப்பறை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் வாக்குச்சாவடிகளில் வாக்காளிக்க விரும்பும் பட்சத்தில் அவர்கள் வாக்காளிக்க ஏதுவாக வாக்குச்சாவடியில், சாய்வு நடைபாதை (Ramp) வசதி மற்றும் சக்கர நாற்காலி வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வாக்காளர்கள் எளிதாக வாக்குச்சாவடியை அடையாளம் காண தேவையான சின்னங்கள் மற்றும் வழிகாட்டி பலகைகள் அமைக்கப்பட்டுள்ளன.
- இந்தியா தேர்தல் ஆணையத்தின் புதிய முன்னெடுப்பாக, வாக்களிக்க வரும் வாக்காளர்களுக்கு வழங்கப்படும் வாக்காளர் தகவல் சீட்டு (Voter Information Slip)-இல் வாக்காளர்களின் பாகம் எண் (Part Number) மற்றும் வரிசை எண் (Serial Number) தெளிவாகவும் பெரிய எழுத்துக்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் வாக்காளர் தங்களது பெயரை எளிதாக கண்டறிய வாக்குச்சாவடி மையங்களில், அகரவரிசை வாக்காளர் பட்டியல் வைக்கப்பட்டுள்ளது, இதன் மூலம் வாக்காளர்கள் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் எளிதாக கண்டறிந்து சிரமமின்றி வாக்களிக்க இயலும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- வாக்குச்சாவடிகளுக்கு வருகை தரும் வாக்காளர்கள் தங்களது கைப்பேசிகளை வாக்குச்சாவடிக்குள் கொண்டு செல்லாமல் பாதுகாப்பாக வைக்க ஏதுவாக, வாக்குச்சாவடி வெளியே Pigeon Hole (கைப்பேசி வைக்கும் அலமாரி) வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், அனைத்து வாக்குச்சாவடிகளையும், தேர்தல் ஆணையம் காண்கணிக்கும் வகையில் இணைய வழி ஒளிபரப்பு (Webcasting) செய்யப்படும். இதன் மூலம் தேர்தல் நடைமுறை ஒழுங்காகவும் பாதுகாப்பாகவும் நடைபெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் வரை பொதுமக்கள் தங்களது குறைகளுக்கான மனுக்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள குறைதீர்க்கும் மனுக்கள் பெட்டியில் போடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
- காஞ்சிபுரம் மாவட்ட பொதுமக்கள் அனைவரும் தேர்தல் நாளில் தவறாமால் தங்களது வாக்கினை பதிவு செய்து, வாக்குச் சதவீதத்தை அதிகரிக்க ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
ட்ரெண்டிங் செய்திகள்






















