பெண் பத்திரிகையாளர்களை அவதூறாகப் பேசிய வழக்கில், நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகருக்கு 1 மாதம் சிறைத் தண்டனை மற்றும் 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, சென்னை சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது. பத்திரிகையாளர் பாதுகாப்பு சங்க செயலாளர் அளித்த வழக்கில், இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 


அபராதத் தொகை 15 ஆயிரம் ரூபாயை அவர் செலுத்திய நிலையில், மேல் முறையீடு செய்ய ஏதுவாக தண்டனையை சென்னை சிறப்பு நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. 


பின்னணி என்ன?


முன்னதாக பெண் பத்திரிகையாளர்கள் பணிபுரிவது குறித்து தரக்குறைவான கருத்தை நடிகரும், பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர் கடந்த 2018-ஆம் ஆண்டு தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதைத்தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ்நாடு  பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் மிதார் மொய்தீன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.


அதை விசாரித்த சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவு எஸ்.வி.சேகர் மீது இந்திய தண்டனை சட்டத்தின் 3 பிரிவுகள் மற்றும் பெண்கள் மீதான கொடுமைகள் தடுப்புச் சட்டத்தின் ஒரு பிரிவு என 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தது.


இதுதொடர்பான வழக்கு சென்னை எம்.பிக்கள், எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கிலிருந்து எஸ்.வி.சேகரை விடுவிக்க சிறப்பு நீதிமன்றம் மறுத்த நிலையில், தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.


இன்று தீர்ப்பளித்த நீதிபதி ஜி.ஜெயவேல், “புகார் குறித்த குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கபட்டுள்ளன. எனவே இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளான அமைதியை சீர் குலைத்தல், தெரிந்த குற்றம் எனக் கருதி மிரட்டல் விடுத்தல், பெண்கள் மீதான கொடுமைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடிகர் எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனை மற்றும் 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது” என தீர்ப்பளித்தார்.


அபராதத் தொகை 15 ஆயிரம் ரூபாயை அவர் செலுத்திய நிலையில், மேல் முறையீடு செய்ய ஏதுவாக தண்டனையை சென்னை சிறப்பு நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.