Minister Ma Subramanian: உடல்நலக் குறைவு காரணமாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.


உடல்நலக்குறைவு:


தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உடல்நலனில் அதிக அக்கறை கொண்டவர். உடற்பயிற்சியில் அதிக ஆர்வம் கொண்ட இவர், அடிக்கடி மாரத்தான்களில் கூட பங்கேற்றுள்ளார்.  இந்நிலையில், சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தனது வீட்டில் இன்று பார்வையாளர்களை சந்தித்துக் கொண்டிருந்த போது, லேசான மயக்கம் ஏற்பட்டது. இதனால்,  கிண்டியில் உள்ள கலைஞர்  நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனைக்கு  அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அமைச்சரின் உடலில்  சர்க்கரை அளவு குறைந்த காரணமாக மயக்கம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளனர்.  


திடீர் மயக்கம் அடைந்த அமைச்சர் மா.சுப்பிரமணியனை கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் இருந்து ஓமந்தூரார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள்  முழு உடல் பரிசோதனை மேற்கொண்டனர்.  பின்னர், அவருக்கு ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட்டதாக மருத்துவமனை  தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது ஆஞ்சியோ பரிசோதனை முடிவில் எந்தவித அடைப்பும் இல்லை என்று தெரியவந்தது. இதனை அடுத்து, அமைச்சர் மா.சுப்பிரமணியன் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார்.


வீடு திரும்பிய அமைச்சர்:


திமுக ஆட்சி அமைந்ததும் மக்கள் நல்வாழ்வு அமைச்சராக பொறுப்பேற்ற மா. சுப்பிரமணியன், கொரோனா காலகட்டத்திலும் மும்முரமாக செயல்பட்டார்.  ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் நேரடியாக சென்று அடிக்கடி ஆய்வு மேற்கொண்டு வருகிறார். சமூக வலைதளங்கள் மற்றும் பொதுமக்களிடையே நன்கு அறிமுகமான அமைச்சராகவும் செயல்பட்டு வருகிறார். உடற்தகுதியிலும் மிகுந்த அக்கறை கொண்டவராக திகழ்கிறார்.  இந்த நிலையில் தான் திடீரென மா. சுப்பிரமணியன் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் வீடு திரும்பியுள்ளாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.


நேற்று கூட சைதை தொகுதியைச் சேர்ந்த சிறுவர் சிறுமியர் 50 பேர் உலக சிலம்பு விளையாட்டு சங்கத்தின் 4th State Level open Silambam championship இல் வென்ற கோப்பைகளுடன், அமைச்சர் மா. சுப்பிரமணியனை சந்தித்து வாழ்த்து பெற்று இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.