சுயமரியாதையை சீண்டிப் பார்ப்பதா... தமிழர்களின் சூட்டை பாஜக உணர வேண்டிருக்கும்- எச்சரிக்கும் ஸ்டாலின்
தமிழ், ஆங்கிலப் பெயர்களிலும் இந்தியைத் திணிக்கும் முயற்சியைக் கைவிட்டு, உடனடியாக அங்கு சரியான தமிழ்ப் பெயர்கள் இடம்பெற வேண்டும். இல்லையென்றால் தமிழர்களின் சூட்டை பா.ஜ.க. அரசு உணர வேண்டி இருக்கும் என முதலமைச்சர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தில் இந்தி திணிப்பு
தமிழகத்தில் இந்தி திணிப்பிற்கு எதிராக தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், திருச்சியில் மண்டல் ரயில்வே அலுவலக நுழைவு வாயிலில் 'கர்தவ்ய த்வார்' என இந்தியில் உள்ள வார்த்தை அப்படியே ஆங்கிலத்திலும் தமிழிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனத்தை தெரிவித்து இருந்தனர். உடனடியாக மாற்றம் செய்யப்படவில்லையென்றால் போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தனர். இந்த நிலையில் இது தொடர்பாக முதலமைச்சரும் திமுக தலைவருமான ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில்,
இந்தி வார்த்தை தமிழில்- ஸ்டாலின் எதிர்ப்பு
பா.ஜ.க. அரசின் இந்தித் திணிப்பு: நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்! இந்தித் திணிப்பு வெறியில் எல்லை மீறிச் சென்று கொண்டிருக்கிறது பா.ஜ.க.! 'மொழி ஒன்று - வரிவடிவம் மூன்று' எனும் வகையில் இந்திப் பெயரையே தமிழ், ஆங்கிலத்திலும் எழுதி வைக்கும் இழிவான HindiImposition செயலில் இறங்கியுள்ளது ஒன்றிய பா.ஜ.க. அரசு!
- திருச்சி மண்டல இரயில்வே அலுவலக நுழைவு வாயிலில் 'கர்தவ்ய த்வார்' என எழுதி வைத்துள்ளனர்.
- வருங்கால வைப்பு நிதி அலுவலகங்களில் (EPFO) ஏற்கெனவே 'பவிஷ்ய நிதி பவன்' என்ற பெயரைத் திணித்து விட்டனர்.
- குற்றவியல் சட்டங்களுக்கும் சமஸ்கிருதப் பெயரைத்தான் ஆங்கில வரிவடிவத்தில் எழுதுகின்றனர்.
- ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சகத்தின் பெயர் 'ஜல் சக்தி' ஆகிவிட்டது.
- மகாத்மா காந்தி நூறு நாள் வேலைத் திட்டப் பெயர் மாற்றத்திலும் இதே வேலையைத்தான் காட்டினார்கள்.
எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்
கொட்டமும், ஆணவமும் கூடிக்கொண்டே போகிறது. தமிழர்களின் சுயமரியாதையைச் சீண்டிப் பார்க்கும் இவர்களுக்குச் சரியான பாடம் புகட்ட வேண்டும்! தமிழ், ஆங்கிலப் பெயர்களிலும் இந்தியைத் திணிக்கும் முயற்சியைக் கைவிட்டு, உடனடியாக அங்கு சரியான தமிழ்ப் பெயர்கள் இடம்பெற வேண்டும். இல்லையென்றால் தமிழர்களின் சூட்டை ஒன்றிய பா.ஜ.க. அரசு உணர வேண்டி இருக்கும் என்று எச்சரிக்கை விடுக்கிறேன் என ஸ்டாலின் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.























