திருப்பூரில் அடிதடியை விசாரிக்கச்சென்ற சிறப்பு உதவி ஆய்வாளர், சம்பவ இடத்திலேயே வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, விசாரணை நடந்து வருவதாக மேற்கு மண்டல ஐஜி செந்தில் குமார் தகவல் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே திருப்பூர் மாவட்டம், சிக்கனூத்து அருகில் ரோந்துப் பணியின்போது உயிரிழந்த குடிமங்கலம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் குடும்பத்தினருக்கு ரூபாய் ஒரு கோடி நிதியுதவி வழங்கப்படுவதாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு;

’’திருப்பூர்‌ மாவட்டம்‌, குடிமங்கலம்‌ காவல்‌ நிலையத்தில்‌ சிறப்பு உதவி ஆய்வாளராகப்‌ பணிப்புரிந்துவந்த சண்முகவேல்‌ (வயது 57) மற்றும்‌ ஆயுதப்படைக்‌ காவலர்‌ அழகுராஜா ஆகிய இருவரும்‌ நேற்று (05.08.2025) இரவு 11.00 மணியளவில்‌ ரோந்துப்‌ பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சிக்கனூத்து அருகில்‌ தனியரின்‌ தோட்டத்து சாலையில்‌ நடந்த அடிதடி பிரச்சனை குறித்து தகவல்‌ அறித்ததும்‌ விசாரிக்க சம்பவ இடத்திற்குச்‌ சென்றனர்.

அப்போது அடிதடி பிரச்சனையில்‌ ஈடுபட்டிருந்த மூவர்‌ சிறப்பு உதவி ஆய்வாளர்‌ மற்றும்‌ ஆயுதப்படை காவலர்‌ ஆகிய இருவரையும்‌ துரத்திச்‌ சென்று அரிவாளால்‌ வெட்டியதில்‌ சிறப்பு உதவி ஆய்வாளர்‌ சண்முகவேல்‌ என்பவர்‌ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்‌ என்ற துயரகரமான செய்தியைக்‌ கேட்டு மிகுந்த அதிர்ச்சியும்‌, வேதனையுமடைந்தேன்‌.

விரைந்து கைதுசெய்ய உத்தரவு

சிறப்பு உதவி ஆய்வாளர்‌ சண்முகவேல்‌‌ உயிரிழப்பு தமிழ்நாடு காவல்துறைக்கும்‌ அவரது குடும்பத்தினருக்கும்‌ ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்‌. இந்தக்‌ கொடூரச்‌ செயலில்‌ ஈடுபட்ட குற்றவாளிகளை விரைந்து கைதுசெய்ய காவல் துறையினருக்கு உத்தரவிட்டுள்ளேன்‌.

ஒரு கோடி ரூபாய்‌ நிவாரண நிதி

சண்முகவேலை இழந்து வாடும்‌ அவரது குடும்பத்தினருக்கும்‌ அவரது உறவினர்கள்‌ மற்றும்‌ அவருடன்‌ பணிபுரிபவர்களுக்கும்‌ எனது ஆழ்ந்த இரங்கலையும்‌ ஆறுதலையும்‌ தெரிவித்துக்கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாய்‌ நிவாரண நிதி வழங்கிடவும்‌ உத்தரவிட்டுள்ளேன்‌’’.

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.