கோடியக்கரை அருகே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நாகை, வேதாரண்யம் மீனவர்கள் மீது கத்தியால் வெட்டி இலங்கை கடற்கொள்ளையர்கள் மீண்டும் கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும், மூன்று லட்சம் ரூபாய் மதிப்புள்ள வலை, ஜிபிஎஸ் கருவி செல்போன்கள், இடுப்பில் இருந்த வெள்ளி அருணாக்கயிறை அறுத்து சென்று அட்டூழியம் செய்துள்ளனர்.

 

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்துள்ள வெள்ளப்பள்ளம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த அஞ்சம்மாள் என்பவருக்கு சொந்தமான ஃபைபர் படகில் மணியன் வேல்முருகன் சத்யராஜ் கோடிலிங்கம் உள்ளிட்ட நான்கு மீனவர்கள் நேற்று இரவு கோடியக்கரை அருகே கடலில் வலை விரித்து மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது  அதிவேக படகுகளில் வந்த மூன்று இலங்கை கடற்கொள்ளையர்கள் வேதாரண்யம் மீனவர்களின் படகை சுற்றி வளைத்து அவர்களை கத்தியால் வெட்டத் தொடங்கியுள்ளனர். இதனை தடுத்த கோடிலிங்கம், மணியன் ஆகியோரை ரப்பர் தடியால் சாரமாறியாக தாக்கி, கை கால் முதுகு உள்ளிட்ட இடங்களில் கத்தியால் வெட்டியுள்ளனர். இதனால் அதிர்ச்சிக்கு உள்ளான மீனவர்கள் அச்சத்தில் உறைந்தனர். இதனை பயன்படுத்திக் கொண்ட இலங்கை கடற்கொள்ளையர்கள் படகில் இருந்த மூன்று லட்சம் ரூபாய் மதிப்புள்ள வலை ஜிபிஎஸ் கருவி 4 செல்போன்கள் மற்றும் மீனவர்களின் இடுப்பில் இருந்த வெள்ளி அரைஞாண் கயிறை அறுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.



 

படுகாயம் அடைந்த மீனவர்கள் நாகை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு கத்தியால் வெட்டு காயம் பட்ட அக்கரைப்பேட்டையை சேர்ந்த கோடிலிங்கம் வெள்ளபள்ளத்தை சேர்ந்த மணியன் ஆகியோருக்கு தையல் போட்டு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனிடையே பாதிக்கப்பட்ட மீனவர்களை சந்தித்து தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் ஆகியோர் ஆறுதல் கூறினர்.

 

கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து இலங்கை கடல் கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தி அவர்களது பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மீன்பிடி தளவாடப் பொருட்களை கொள்ளையடித்து செல்லும் சம்பவத்தால் நாகை வேதாரண்யம் மீனவர்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மீனவ கிராமங்களிடையே பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.