தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கட்டுக்குள் வராமல் இருந்த கொரோனா தொற்று, நேற்று சற்றே ஆறுதல் அளிக்கும் விதமாக குறையத் தொடங்கியது. கொரோனா தடுப்பு பணிகளை துரிதப்படுத்துவதற்காக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்வதற்காக தூத்துக்குடி சென்றார். தூத்துக்குடி விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, “தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், தேனி ஆகிய மாவட்டங்களில் கொரோனா சிகிச்சைக்காக செய்யப்பட்டுள்ள மருத்துவ கட்டமைப்பு மற்றும் தடுப்பூசி போடும் நடவடிக்கைகளை ஆய்வு செய்ய உள்ளோம்.


தமிழகத்தில் அரசு எடுத்த துரித நடவடிக்கை காரணமாக கொரோனா பாதிப்பு 36 ஆயிரத்தில் இருந்து தற்போது 34 ஆயிரத்து 800 என்ற அளவில் குறைந்து உள்ளது. தமிழகத்திற்கு தற்போது வரை 80 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளன. இதுவரை 70 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. 18 வயது முதல் 44 வயதில் உள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு ரூபாய் 46 கோடி செலவில் 12 லட்சம் தடுப்பூசிகள் வரவழைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் தடுப்பூசி போடதவர்களே இல்லை என்ற நிலையை உருவாக்குவதற்காக 3.5 கோடி தடுப்பூசிகள் வாங்குவதற்கு உலகளாவிய ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது.  




தமிழகத்தில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு மருத்துவ ஆக்சிஜனுக்கு இக்கட்டான சூழல் இருந்தது. ஆனால், தமிழக சுகாதாரத்துறை, தொழில்முறை, மின்சார வாரியத்துறைகளின் முயற்சியால் ஜாம்ஷெட்பூர், ரூர்கேலா போன்ற பகுதிகளில் இருந்து ஆக்சிஜன் கொண்டு வரப்பட்டு தற்போது மருத்துவ ஆக்சிஜன் தேவை முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளது. கொரோனா மூன்றாவது அலை ஏற்பட்டாலும் அதனை சமாளிக்க கூடிய அளவிற்கு பல்வேறு பகுதிகளிலும் ஆக்சிஜன் உற்பத்தி உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கருப்புப்பூஞ்சை நோய் ஏற்படுவதாக கூறப்படுகிறது. ஆனால், கொரோனா பாதிப்பில் உள்ளவர்களுக்கும் பாதிப்பு ஏற்படுவது குறித்து ஆய்வு செய்ய பல்துறை அலுவலர்கள் அடங்கிய 10-க்கும் மேற்பட்டவர்களை கொண்ட நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது.




ஸ்டீராய்டு கொடுப்பதாலும், அசுத்தமான தண்ணீரில் இருந்து ஆக்சிஜன் உற்பத்தி செய்து அதை மூச்சாக உள்ளிழுப்பதாலும் கருப்பு பூஞ்சை தொற்று ஏற்படுவதாக தெரிவிக்கிறார்கள். இதுகுறித்து, ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு வல்லுனர்கள் குழு இரண்டு நாட்களிலே ஆராய்ச்சியைத் தொடங்கும். கொரோனா வைரசின் உண்மையான உயிரிழப்பை சொன்னால்தான் மக்களுக்கு விழிப்புணர்வும், பயமும் வரும். எனவே, கொரோனா விழிப்புணர்வில் எந்த ஒளிவுமறைவும் இல்லை” என்று கூறினார். தமிழகத்தில் கருப்புப்பூஞ்சை தாக்கத்தில் சில மாவட்டங்களில் தொடர்ந்து பாதிப்பு ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.