விடுமுறைக்கு சுற்றுலா செல்ல திட்டமா.?

இயந்திரங்களுக்கு இணையாக ஓடிக்கொண்டிருக்கும் மக்களுக்கு விடுமுறை தான் ஒரே ஆறுதலாக இருக்கும். அந்த வகையில் ஒரு நாளோ அல்லது இரண்டு நாட்களோ விடுமுறை கிடைத்தால் வெளியூர்களுக்கு பறந்து விடுவார்கள். இயற்கையான மலைப்பகுதிகளுக்கு சென்று மன நிம்மதியாக ஓய்வு எடுப்பார்கள். அப்படி வார இறுதி நாட்களில் கிடைக்கும் விடுமுறையையொட்டி வெளியூர் செல்ல திட்டமிடும் பயணிகளுக்காக தமிழக அரசின் போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்து இயக்கப்படுகிறது.

Continues below advertisement

இது தொடர்பாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாளை 14/11/2025 (வெள்ளிக்கிழமை) நாளை மறுநாள் 15/11/2025 (சனிக்கிழமை) மற்றும்  16/11/2025 (ஞாயிற்றுக் கிழமை முகூர்த்தம்) மற்றும் வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

வார விடுமுறை சிறப்பு பேருந்து அறிவிப்பு

இதனையடுத்து பயணிகளுக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்கப்படவுள்ளது. அந்த வகையில் சென்னை கோயம்பேட்டிலிருந்து வேளாங்கண்ணி, திருவண்ணாமலை, நாகை, ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு நாளை (14/11/2025) வெள்ளிக் கிழமை அன்று 55 பேருந்துகளும் 15/11/2025 சனிக்கிழமை அன்று 55 பேருந்துகளும்  இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மாதாவரத்திலிருந்து 14/11/2025 மற்றும் 15/11/2025 ஆகிய நாட்களில் 20 பேருந்துகளும் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Continues below advertisement

இதே போல சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை. திருச்சி, கும்பகோணம், மதுரை. திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு நாளை 14/11/2025 (வெள்ளிக்கிழமை) அன்று 340 பேருந்துகளும், 15/11/2025 (சனிக்கிழமை) 350 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.  மற்றும் பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 100 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

முன்பதிவு செய்து பயணிக்க அறிவுறுத்தல்

மேலும். ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை அன்று 7,227 பயணிகளும் சனிக்கிழமை 2,975 பயணிகளும் மற்றும் ஞாயிறு அன்று 7,563 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.