SP Velumani: அதிமுகவில் எதிர்பாராத திருப்பம்; மீண்டும் சசிகலா, டிடிவி தினகரன்; எஸ்.பி. வேலுமணி கூறுவது என்ன.?
சட்டப்பேரவையில் தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டட நிலையில், பேரவை முடிந்த பேட்டியளித்த எஸ்.பி. வேலுமணி, அதிமுகவை ஒன்றிணைப்பது பற்றி அதிரடியாக பேசினார்.

இன்றைய சட்டப்பேரவை நிகழ்வுகளுக்குப் பின், எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் ஆகியோர் கூட்டாக பேட்டியளித்தனர். அப்போது பேசிய எஸ்.பி. வேலுமணி, அதிமுகவை மீண்டும் ஒன்றிணைப்பது குறித்து பேசினார். அதில், சசிகலா, டிடிவி தினகரனை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என்ற அதிரடி கருத்தை தெரிவித்துள்ளார். இதனால், இபிஎஸ் அணிக்கும், இவர்களது அணிக்கும் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
பேரவையில் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்த அதிமுக எஸ்.பி. வேலுமணி அணி
இன்று சட்டப்பேரவையில், தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. அப்போது, தவெக அரசுக்கு ஆதரவாக, அதிமுகவின் எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் அணி வாக்களித்தது. அதற்காக எஸ்.பி. வேலுமணி எழுந்து உரையாற்ற முற்பட்ட போது, இபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ-க்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், இரு அணிகளுக்குள்ளும் சலசலப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து நடந்த வாக்கெடுப்பில், எஸ்.பி. வேலுமணி தலைமையிலான 25 எம்எல்ஏ-க்கள் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
அதில் எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் தவிர, ஹரி, காமரா4, கே.பி. அன்பழகன், இசக்கி சுப்பையா, சத்தியபாமா, மரகதம் குமரவேல், மரகதம் வெற்றிவேல், லீமா ரோஸ், சுகுமார், சேகர், திலீபன், நடராஜ், நத்தம் விஸ்வநாதன், மோகன், ரவி மனோகரன், ராகேஷ், எம்.ஆர். விஜயபாஸ்கர், கே.சி. வீரமணி, ஜெயக்குமார், ஹரி பாஸ்கர், சி. விஜயபாஸ்கர், அருண்மொழிதேவன், பாலகிருஷ்ண ரெட்டி ஆகியோர் அடங்குவர்.
“சசிகலா, டிடிவி தினகரனை கட்சியில் மீண்டும் இணைக்க வேண்டும்“
இதைத் தொடர்ந்து, எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, சி.வி. சண்முகத்தைத் தொடர்ந்து பேசிய எஸ்.பி. வேலுமணி, சட்டமன்றத்தில் தங்கள் தலைமையிலேயே பெரும்பான்மை அதிமுக உறுப்பினர்கள் இருந்ததாக தெரிவித்தார். அதோடு, அதிமுகவை உடைக்க தாங்கள் முயல்வதாக தவறான செய்தி பரப்பப்படுவதாக அவர் வேதனை தெரிவித்தார்.
தொடர்ந்து, 2019, 2021 மற்றும் தற்போதைய 2026 தேர்தல் தோல்விகள் குறித்து ஆய்வு செய்யவே பொதுச் செயலாளரிடம் கூறினோம் என தெரிவித்த அவர், அதிமுக தங்கள் உயிர் மூச்சு என்றும், அதனால் கட்சியை உடைக்க தாங்கள் முயலவில்லை என தெளிவுபடுத்தினார்.
அதேபோல், செங்கோட்டையன், இபிஎஸ்-ஐ முதலமைச்சராக்கிய சசிகலா, ஓ. பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், ஜே.சி.டி. பிரபாகர் என எல்லோரையும் இணைத்துக் கொண்டு செயல்படவேண்டும் என்றே தாங்கள் கூறியதாகவும், ஆனால், எல்லோரையும் வெளியே அனுப்பிக்கொண்டே இருந்தால் எப்படி சரியாக இருக்கும் என எஸ்.பி. வேலுமணி கேள்ளி எழுப்பினார்.
மேலும், இப்போதும் தாங்கள் தெளிவாகவே இருப்பதாகவும், கட்சியின் நலனே முக்கியம் என கூறிய அவர், பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான் என்றும், சசிகலா, டிடிவி தினகரன் போன்று கட்சியை விட்டு வெளியே சென்றவர்கள் எல்லோரையும் ஒன்றுசேர்த்து, முதலில் கட்சியை இணைக்க வேண்டும் என்றும், இப்போது இருப்பவர்களை எல்லாம் குறைகளை கூறி வெளியேற்றிவிட வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.
இனியாவது, எல்லோரையும் அரவணைத்து, கட்சியை பலப்படுத்த வேண்டும் என்பதே தங்கள் நோக்கம் என்றும், அதை எடப்பாடி பழனிசாமி செய்ய வேண்டும் எனவும் எஸ்.பி. வேலுமணி வலியுறுத்தினார்.
ட்ரெண்டிங் செய்திகள்





















