Rameswaram train: ராமேஸ்வரம் ரயில் இனி சென்னை எக்மோருக்கு செல்லாது.! எங்கே வரை இயக்கப்படும்.? வெளியான லேட்டஸ்ட் அறிவிப்பு
Rameswaram train: ராமேஸ்வரத்திற்கு தினமும் பல ஆயிரம் பயணிகள் சென்று வரும் நிலையில், ராமேஸ்வரம் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.

ரயில்களில் நிரம்பி வழியும் கூட்டம்
நீண்ட தூர பயணத்திற்கு பொதுமக்கள் பெரிதும் விரும்புவது ரயில் பயணத்தை மட்டுமே அந்த வகையில், குறைவான கட்டணத்தில் பாதுகாப்போடு அனைத்து வசதிகளும் இருப்பதால் ரயில்களில் தினந்தோறும் கூட்டம் நிரம்பி வழிகிறது. இதற்கு ஏற்ப நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான ரயில்கள் தினமும் இயக்கப்படுகிறது. இருந்த போதும் அனைத்து ரயில்களிலும் முன்பதிவு ஒரு மணி நேரத்தில் முடிவடைந்து விடுகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றாக இருப்பது ராமேஸ்வரம். இங்கு ராமநாதசுவாமி கோயில், அக்னி தீர்த்த கடற்கரை, தனுஷ்கோடி, பாம்பன் பாலம், முன்னாள் குடியரசு தலைவர் ஏபிஜே அப்துல் கலாம் நினைவிடம் உள்ளிட்டவற்றை பார்க்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.
ராமேஸ்வரம் ரயில் சேவையில் மாற்றம்
எனவே சென்னையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு தினமும் இரண்டு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெறுவதன் காரணமாக எழும்பூருக்கு பதிலாக தாம்பரத்தில் இருந்து ரயில்கள் புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை நவீனப்படுத்தும் பணியானது கடந்த ஜூலை மாதம் முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் 10க்கும் மேற்பட்ட ரயில் தாம்பரத்தில் இருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டது. இதன் படி பல ரயில்கள் இயக்கப்பட்டும் வந்தது. இதன் படி ராமேஸ்வரத்திற்கு செல்லும் இரண்டு ரயில்களும் தாம்பரத்தில் இருந்து இயக்கப்பட்டது.
தாம்பரத்தில் இருந்து ரயில்கள் இயக்கம்
இதில் சேது விரைவு ரயில் மட்டும் எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து கடந்த மாதம் முதல் மீண்டும் இயக்கப்பட்டு வந்தது. தற்போது அந்த ரயிலும் வருகிற 20ஆம் தேதி முதல் தாம்பரத்தில் இருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் மறுசீரமைப்பு பணிகள் காரணமாக பிப்ரவரி 20ஆம் தேதி முதல் ஏப்ரல் 6ஆம் தேதி வரை தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து ரயில் சேவை துவங்கி முடிவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் சேவையில் தற்காலிக மாற்றம்
- சேது விரைவு ரயில் (ரயில் எண் 22662) – (இராமேஸ்வரம் – சென்னை எழும்பூர்) 19 பிப்ரவரி 2026 முதல் 05 ஏப்ரல் 2026 வரை சென்னை எழும்பூர் நிலையத்திற்கு பதிலாக தாம்பரம் நிலையத்தில் ரயில் நிறுத்தப்படும். தாம்பரம் ரயில் நிலையத்திற்கு காலை 06.35 மணிக்கு வந்தடையும்.
- சேது விரைவு ரயில் (ரயில் எண் 22661) - (சென்னை எழும்பூர் – இராமேஸ்வரம்) பிப்ரவரி 20ஆம் தேதி முதல் ஏப்ரல் 6ஆம் தேதி வரை சென்னை எழும்பூர் நிலையத்திற்கு பதிலாக தாம்பரம் நிலையத்தில் இருந்து புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து மாலை 06.25 மணிக்கு புறப்படும் என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே பயணிகள் இதனை கருத்தில் கொண்டு தங்களின் பயண திட்டங்களை முன்னதாக ஏற்பாடு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுவதாக அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.























