சிவகங்கை மாவட்டத்தில் காவலாளி அஜித்குமார் என்பவரை விசாரணைக்காக போலீசார் அழைத்துச் சென்றபோது அவர் காவல்நிலையத்தில் வைத்து உயிரிழந்தார். இந்த லாக்கப் மரணம் பொதுமக்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, 

உறவினர்கள் போராட்டம்:

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோவில் காவலாளி அஜித் குமார் என்பவர் பெண் பக்தரின் காரில் இருந்த  ஒன்பதரை பவுன் நகையை திருடி விட்டதாக வந்த புகாரை அடுத்து, திருபுவனம் காவல்துறை அஜித் குமாரை கைது செய்து விசாரணை செய்ததாகவும், அச்சமயத்தில் காவலரின் தாக்குதலால் அஜித் குமார் மரணம் அடைந்து விட்டதாகவும் அவரின் உறவினர்கள் இறந்த அஜித் குமாரின் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ரிவியூ எழுதிய முதலமைச்சர்?

"ஜெய்பீம் படம் பார்த்தேன். உள்ளம் உலுக்கியது" என சினிமா Review எழுதிய விடியா அரசின் முதலமைச்சர் எங்கே இருக்கிறார்?  விக்னேஷ் லாக்கப் மரணத்தின் போது, சட்டப்பேரவையிலேயே பச்சைப்பொய் பேசியவர் தானே நீங்கள்? இதற்கும் அதே போல் பொய் தான் பதிலாக வருமா?

தவறு செய்ததாக காவல்துறை கருதினால், கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்து, உரிய சட்ட நெறிமுறையை பின்பற்ற வேண்டுமே தவிர, சட்டத்தை தங்கள் கைகளில் முழுமையாக காவல்துறை எடுத்துக்கொள்ள கூடாது.

பொம்மை முதல்வர்:

தன்னுடைய நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையைக் கூட நிர்வகிக்கத் தெரியாத பொம்மை முதல்வருக்கு எனது கடும் கண்டனம். திருபுவனம் காவல் நிலையத்தில் திருக்கோவில் காவலாளி அஜித் குமார் மரணம் அடைந்த நிகழ்வு குறித்து முழு உண்மையை வெளி கொண்டுவர உடனடியாக மாவட்ட நீதிபதி தலைமையில்  குழு அமைத்து, முழு விசாரணை நடத்தி, இந்த மரணத்திற்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும், மேலும் இறந்தவர் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க இந்த விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் அதற்கு தயாராகி வருகின்றனர். திமுக அரசு ஆட்சியை தக்க வைக்க பல நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில்,  இதுபோன்ற சட்டம் ஒழுங்கு நிகழ்வுகள் ஆளுங்கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.