ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஜூலை 1 முதல் தடை விதிக்கப்படும் நிலையில் பிளாஸ்டிக் தட்டு, கப்புகள், ஸ்ட்ரா, சிகரெட் அட்டைகள், 100 மைக்ரானுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் உள்ளிட்ட பல்வேறு பொருட்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.


முன்னதாக 2019ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி பிளாஸ்டிக் பொருட்களைத் தவிர்க்குமாறு நாட்டு மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார். அதைத் தொடர்ந்து சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மத்திய அரசு தடை விதித்தது. இந்த தடை ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.


இந்நிலையில் எந்தெந்தப் பொருட்களுக்குத் தடை என்று பார்க்கலாம்.


'' * பிளாஸ்டிக் குச்சிகளைக் கொண்ட இயர் பட்ஸ், 
* பிளாஸ்டிக் கொடிகள், 
* பிளாஸ்டிக் குச்சிகளைக் கொண்ட பலூன்கள், 
* மெழுகுவர்த்திகள், 
* ஐஸ்க்ரீம் குச்சிகள், 
* தெர்மாகோல்,
* பிளாஸ்டிக் கோப்பைகள், கப்புகள்
* பிளாஸ்டிக்கால் ஆன ஸ்பூன், ஸ்ட்ரா, ஃபோர்க், கத்திகள், ட்ரேக்கள், 
* பிளாஸ்டிக் அட்டைகள்,
* இனிப்புப் பொட்டலங்களை மூடும்போது பேக்கிங்கில் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பூச்சு, 
* பிளாஸ்டிக் வரவேற்பு அட்டைகள் (invitation cards),
* சிகரெட் அட்டைகள்
* 100 மைக்ரானுக்குக் கீழ் உள்ள பிளாஸ்டிக் 


ஆகியவற்றின் உற்பத்தி, விநியோகம், விற்பனைக்கு முழுமையாகத் தடை விதிக்கப்படுகிறது. 




அதேபோல கடந்த ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி முதல் பிளாஸ்டிக் பைகளுக்கான தடிமன் 50 மைக்ரானில் இருந்து 75 மைக்ரானாக அதிகரிக்கப்பட்டது. 2022 டிசம்பர் 31-ம் தேதி முதல் பிளாஸ்டிக் பைகளுக்கான தடிமன் 120 மைக்ரானாக அதிகரிக்கப்பட உள்ளது.


அனைத்து பிளாஸ்டிக் தயாரிப்பாளர்கள், மின்னணு வணிக நிறுவனங்கள், கடைக்காரர்கள், பள்ளி, மருத்துவமனை, வணிக வளாகம், திரையரங்குகள் உள்ளிட்ட பல்வேறு தரப்புக்கும் இது தெரிவிக்கப்படுகிறது. 


இந்தத் தடையை மீறுவோர் மீது சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் 1986-ன்படி, அபராதம், பொருட்கள் பறிமுதல், சம்பந்தப்பட்ட நிறுவனத்தையே மூடுதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று மத்திய அரசு தெரிவித்தது.


இந்நிலையில் ஜூலை 1 முதல் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் இறக்குமதிக்கும் தடை விதிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் இன்று (ஜூன் 28) வெளியிட்டுள்ளது.


இதுகுறித்து மத்திய அமைச்சகம் கூறும்போது, ’’ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் மிகவும் குறைவாகவே (பெரும்பாலும் ஒரு முறை) பயன்படுத்தப்பட்டாலும் அதிக குப்பையை நாடு முழுவதும் ஏற்படுத்துகிறது. இவற்றைத் தடுக்க ஜூலை 1 முதல் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் உற்பத்தி, இறக்குமதி, விற்பனை, பயன்பாட்டுக்குத் தடை விதிக்கப்படுகிறது. தடை செய்யப்பட்ட ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டி பொருட்கள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இடையே நுழைவதைத் தடுக்க, எல்லைகளில் சோதனை மையங்கள் அமைக்கப்பட உள்ளன. 


இதை முறையாக அமல்படுத்துவதற்காக, தேசிய மற்றும் மாநிலக் கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்படும். முறைகேடாக ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் உற்பத்தி, இறக்குமதி, விற்பனை, பயன்படுத்துவது ஆகியவற்றைத் தவிர்க்க சிறப்பு அமலாக்கக் குழுக்கள் உருவாக்கப்படும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


தமிழகத்தில் 2019 ஜனவரி 1 முதல் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


பிளாஸ்டிக் பொருட்கள், தடை, அவற்றுக்கான மாற்று குறித்து விரிவாக அறிய: https://tnpcb.gov.in/PPFTN/tamil/faq.php


*


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண