நானும் டெல்டாக்காரன் என்பதால் டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி சுரங்கம் அமைக்க எந்த விதத்திலும் தமிழ்நாடு அரசு நிச்சயம் அனுமதி வழங்காது என்று  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரவையில் திட்டவட்டமாக தெரிவித்தார்.




சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தில், டெல்டா பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் நடத்த ஆய்வு மேற்கொள்வது தொடர்பாக  திமுக, அதிமுக, காங்கிரஸ், பாமக, விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சியினர் அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். 


இந்த கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதிலளித்து பேசிய தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, முதலமைச்சர் எவ்வளவு வேகமாக செயல்பட்டு உடனடியாக பிரதமரின் கவனத்தை ஈர்த்துள்ளார் என்பது அனைவருக்கும் தெரியும் என பேசினார். அதிகாரிகளும் மத்திய அரசின் நிலக்கரி துறையை தொடர்பு கொண்டு அடுத்தகட்ட மேல்நடவடிக்கைகளை எடுக்க வேண்டாம் என பேசியிருப்பதாகவும் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார். தமிழ்நாடு அரசு ஒருபோதும் இத்திட்டத்தை அனுமதிக்காது என்பதை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றிருப்பதாகவும் அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்தார். 


தொழில்துறை அமைச்சரை தொடர்ந்து கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதிலுரை அளித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “ இங்கே கொண்டு வந்திருக்கக்கூடிய கவன ஈர்ப்புத் தீர்மானத்திற்கு நம்முடைய மாண்புமிகு தொழில் துறை அமைச்சர் அவர்கள் விளக்கமாக பதிலளித்திருக்கிறார்கள். எனவே, நான் நீண்ட நேரம் அதுகுறித்து விளக்க வேண்டிய அவசியமில்லை. நீங்களெல்லாம் இந்தச்  செய்தியைக் கேட்டு எப்படி அதிர்ச்சிக்கு ஆளானீர்களோ, நானும் அதே உணர்வோடுதான் அதிர்ச்சிக்கு ஆளானேன். இதுகுறித்த செய்தியைப் பார்த்தவுடன் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை நான் தொடர்பு கொண்டு பேசி,அதற்குப்பிறகு உடனடியாக மாண்புமிகு பிரதமர் அவர்களுக்குக் கடிதம் எழுதினேன்.




அதோடு, நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நடந்து கொண்டிருக்கிற காரணத்தால், அங்கே டெல்லியில் இருக்கக்கூடிய திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு அவர்களுக்கு அந்தக் கடிதத்தினுடைய நகலை அனுப்பி, உடனடியாக சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சரைச் சந்தித்து, நம்முடைய எதிர்ப்பைத்தெரிவிக்கும் வகையில், நான் பிரதமருக்கு எழுதிய கடிதத்தை நீங்கள் அவரிடத்திலே தரவேண்டுமென்று உத்தரவிட்டேன். அவரும் அதற்கானமுயற்சியிலே ஈடுபட்டார்.


இங்கே மாண்புமிகு தொழில் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்ததுபோல, சம்பந்தப்பட்ட ஒன்றிய அமைச்சர் அவர்கள் வெளியூரில் இருக்கிற காரணத்தால், அவரை நேரில் சந்திக்க இயலாததால், திரு. டி.ஆர். பாலு அவர்கள், அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். அவருடன் பேசியபோது, தமிழ்நாட்டினுடைய முதலமைச்சர் அவர்கள் அனுப்பியிருக்கக்கூடிய கடிதத்திற்குநிச்சயமாக நாங்கள் மதிப்பு அளிப்போம்; கவலைப்பட வேண்டாம்  என்ற ஓர் உத்தரவாதத்தை மத்திய அமைச்சர் சொன்னதாக. டி.ஆர். பாலு  அவர்கள் என்னிடத்திலே தெரிவித்திருக்கிறார்கள்.


ஆகவே, நிச்சயமாக சொல்கிறேன் – முதலமைச்சராக மட்டுமல்ல; நானும் டெல்டா மாவட்டத்தைச் சேர்ந்தவன். எனவே, இதிலே நான் உறுதியாக இருப்பேன். நீங்களெல்லாம் எப்படி உறுதியாக இருக்கிறீர்களோ, அதைவிட அதிகமாக, அந்த அளவிற்கு நானும் உறுதியாக இருப்பேன். எந்தக் காரணத்தைக் கொண்டும், அதற்கு நிச்சயமாக நம்முடைய தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்காது; அளிக்காது; அளிக்காது என்பதைச் சொல்லி அமைகிறேன்”  எனக் கூறியுள்ளார்.