தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம், முகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு வரும் 21-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. அதன் விவரங்களை தற்போது காணலாம்.
அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநரின் அறிக்கை
இது குறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வௌயிட்டுள்ள அறிக்கையில், 21/11/2025 (வெள்ளிக்கிழமை) 22/11/2025 (சனிக்கிழமை) மற்றும் 23/11/2025 (ஞாயிற்றுக் கிழமை முகூர்த்தம்) மற்றும் வார விடுமுறை நாட்களை முன்னிட்டு, சென்னையிலிருந்து இதர இடங்களுக்கும், மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
கிளாம்பாக்கம், கோயம்பேட்டிலிருந்து சிறப்புப் பேருந்துகள்
சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 21/11/2025(வெள்ளிக்கிழமை) அன்று 340 பேருந்துகளும், 22/11/2025(சனிக்கிழமை) 350 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை. வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 21/11/2025 வெள்ளிக் கிழமை அன்று 55 பேருந்துகளும் 22/11/2025 சனிக்கிழமை அன்று 55 பேருந்துகளும், மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு, பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 100 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், மாதாவரத்திலிருந்து 21/11/2025 மற்றும் 22/11/2025 ஆகிய நாட்களில் 20 பேருந்துகளும் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
சென்னை, பெங்களூரு திரும்பி வர சிறப்புப் பேருந்துகள்
மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை அன்று 9,556 பயணிகளும் சனிக்கிழமை 3,732 பயணிகளும் மற்றும் ஞாயிறு அன்று 9,635 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளதாகவும், இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால், தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுவதாக கூறப்பட்டுளளது.
மேலும், இந்த சிறப்பு பேருந்து இயக்கத்தை கண்காணிக்க, அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் தெரிவிக்கப்படுவதாகவும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வௌயிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.