முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு டாஸ்மாக் கடைகளை குறைப்பதைக் காட்டிலும் முற்றிலுமாக  மூடினால்  சிறப்பாக இருக்கும் என பாஜக நிர்வாகி சரத்குமார் தெரிவித்துள்ளார். 

Continues below advertisement

செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாட்டில் குற்றங்கள் குறைந்து வருவதாக சொல்லப்படுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “தமிழ்நாட்டில் பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. சூலூர் சிறுமி கொலை சம்பவத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒவ்வொரு முறையும் இப்படியான சம்பவங்கள் நடக்கும்போது மரண தண்டனை போன்ற கடுமையான தண்டனைகள் கொடுக்க வேண்டும் என நாம் கேட்கிறோம். தண்டனைகள் கடுமைப்படுத்தப்பட்டால் தான் யாரும் இந்த மாதிரி செயலில் இனி ஈடுபட மாட்டார்கள், அதற்கான எண்ணமும் வராது என நினைக்கிறேன். அதற்கு அரசு உரிய முடிவெடுக்கும் என எண்ணுகிறேன்” என கூறினார். 

தொடர்ந்து சரத்குமாரிடம் 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது குறித்த கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது 2016ம் ஆண்டு ஆட்சிக்கு வந்தவுடன் 500 மதுக்கடைகளை மூடினார். எடப்பாடி பழனிசாமி வந்து 500 கடைகளை மூடினார். தேசிய நெடுஞ்சாலைப் பகுதிகளில் உள்ள 3000 மதுபானக் கடைகளையும் மூடினார். 

Continues below advertisement

மு.க.ஸ்டாலின் முதல்வராக வந்து 500 கடைகளை மூடினார். அதனால் விஜய் வந்தவுடனும் 717 கடைகள் மூடப்பட்டுள்ளது. ஆனால் இவர்தான் முதல்முறை பண்ணுவது போன்ற கருத்தை பரப்புகிறார்கள். இது உண்மைக்கு புறம்பான செய்தியாகும். குறைப்பதைக் காட்டிலும் முற்றிலுமாக இந்த அரசு டாஸ்மாக் கடைகளை மூடினால் அது சிறந்த முடிவாக இருக்கும் என நான் கருதுகிறேன்” என தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய சரத்குமார், “பெட்ரோல், டீசல் விலை உயர்வு தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. கச்சா எண்ணெய் விலை ஏறிவிட்டது. இத்தனை நாட்களாக கட்டுப்படுத்தி வைத்த நிலையில் இப்போது விலையை ஏற்ற வேண்டிய சூழல் உண்டாகியுள்ளது. எனினும் இதுவும் மாறும். பல நாடுகள் கலந்து பேசி இதை என்ன செய்யலாம் என யோசித்து வருகிறார்கள். சமநிலை வரவே 6,7 மாதம் ஆகும். இதனை குற்றமாக பார்க்காமல் இயல்பு சம்பவமாக மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்” என கூறினார். 

மேலும், தமிழகத்தில் கூட்டணி ஆட்சி நீண்ட நாட்கள் நீடிக்குமா என்பது தெரியவில்லை. ஆட்சியை எப்படி நடத்துகிறார்கள் என்பதைப் பார்க்க வேண்டும். திமுக, தேர்தலுக்குப் பின் 6 மாதங்கள் இந்த தவெக ஆட்சியைப் பார்த்து செயல்படுவோம் என தெரிவித்திருந்தார். ஆனால் சமீபத்தில் தவெக அமைச்சர் தனக்கு எந்த துறை என்பதை உணராமல் இருப்பது கவலைக்குரிய ஒன்றாக மாறியுள்ளது. எனவே நீங்கள் துறை சார்ந்த விஷயங்களை எல்லாம் பேசிய பிறகு செய்தியாளர்களை சந்திக்க வேண்டும். துறையில் என்ன இருக்கிறது, என்ன செய்ய வேண்டும் என்பதை உணர்ந்தபிறகு பேசினால் நன்றாக இருக்கும்” எனவும் சரத்குமார் தெரிவித்துள்ளார்.