சேலத்தில் காணாமல் போன செல்லப்பிராணி ஜூலி - கண்டுபிடித்து தருபவர்களுக்கு 50,000 பரிசு அறிவிப்பு

’’கடத்தப்படும் நாய்க்குட்டிகள் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை விற்பனை செய்து இரண்டு மாதத்தில் லட்சக்கணக்கில் நாய் கடத்தும் கும்பல் பணம் சம்பாதித்து விடுகிறது’’

Continues below advertisement

நாய்கள் வளர்த்து அதனை இனப்பெருக்கம் செய்ய வைத்து அதன் மூலம் வரும் குட்டிகளை சர்வதேச சந்தையில் விற்பனை செய்ய தனி சந்தையே உள்ளது. இன்னும் சிலர் செல்லப் பிராணிகளை திருடி அதன்மூலம் வருவாய் ஈட்டி வருகின்றனர். சேலம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில், வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகளான நாய்களை திருடிச் சென்று விற்பனை செய்யும் கும்பல் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக நாய்களை வளர்ப்போர் கவலை தெரிவித்துள்ளனர். சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சி அருகே உள்ள சின்ன திருப்பதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (62). ஓய்வுபெற்ற வங்கி அதிகாரியான இவர் அதே பகுதியில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் வளர்த்து வந்த லேபர் டாக் வகையைச் சேர்ந்த நாய் ஒன்றை காணவில்லை என்று கன்னங்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கடந்த 16 ஆம் தேதி அன்று இரவு வீட்டில் வளர்த்து வந்த லேபர் டாக் குட்டியை மயக்க ஊசி செலுத்தி மர்ம நபர்கள் திருடிச் சென்று விட்டனர். திருடப்பட்ட நாய்க்குட்டியின் பெயர் ஜூலி. 

Continues below advertisement

நாயை திருட வந்தவர்கள் இரண்டு ஊசிகள் பயன்படுத்தி உள்ளனர். ஒரு ஊசியில் உள்ள மருந்து அப்படியே உள்ளது. எனவே ஒரு ஊசியை நாய்க்கு செலுத்தி விட்டு இன்னொரு ஊசியை எனக்கு செலுத்தி என்னை கொன்றுவிட்டு வீட்டில் உள்ள பொருட்களை கொள்ளையடிக்க மர்ம கும்பல் திட்டமிட்டுள்ளது என்று சந்தேகம் எழுகிறது. எனவே இது குறித்து உரிய விசாரணை நடத்தி காவல்துறையினரிடம் குட்டியை மீட்டுத் தரவேண்டும். எங்களுக்கும் பாதுகாப்பு வழங்கிட வேண்டும். இதே போல பக்கத்து தெருக்களிலும் செல்லப்பிராணிகள் திருடப்படுவது அதிகரித்துள்ளது. எனவே இதில் காவல்துறை உரிய நடவடிக்கை விரைந்து எடுக்க வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார். ஜூலியை கண்டுபிடித்து தருபவர்களுக்கு ரூபாய் 50,000 பரிசாக வழங்கப்படும் எனவும் சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக பேட்டியளித்த செல்வராஜின் மகன் பிரவீன் கூறுகையில், இரண்டு மாத குட்டியான ஜூலி காணாமல் போய்விட்டது. இதேபோல பக்கத்து தெருவில் வளர்க்கப்பட்ட நாய் குட்டிகளும் காணமல் போயுள்ளது. ஜூலியை காணாமல் எங்களது வீட்டில் உள்ள அதன் தாய் சரியாக உணவு எடுத்துக்கொள்ளாமல் உள்ளது. அதை பார்ப்பது எங்களுக்கு மிகவும் வேதனையாக உள்ளது. காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இதுபோல கடத்தப்படும் நாய்க்குட்டிகள் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுவதாக தெரிகிறது. நாய்களை கடத்திச் சென்று இரண்டு மாதத்தில் லட்சக்கணக்கில் நாய் கடத்தும் கும்பல் பணம் சம்பாதித்து விடுகிறது என்று தெரிவித்தார்.

Continues below advertisement
Sponsored Links by Taboola