கேரளா :  எர்ணாகுளத்தில் இருந்து பெங்களூருக்கு புதிதாக விடப்பட்ட வந்தே பாரத் ரயிலில் சென்ற பள்ளிக் குழந்தைகள், RSS அமைப்பின் பாடலை பாடியது குறித்து விசாரிக்குமாறு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. 

Continues below advertisement

வந்தே பாரத் ரயிலில் RSS பாடல்: விசாரணை நடத்த கேரள அரசு உத்தரவு

கேரளாவின் எர்ணாகுளத்தில் இருந்து பெங்களூருக்கு புதிதாக விடப்பட்ட வந்தே பாரத் ரயிலில் சென்ற பள்ளிக் குழந்தைகள், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் பாடலை பாடியது குறித்து விசாரிக்குமாறு அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது.

வந்தே பாரத் ரயிலில் பயணித்த பள்ளிக் குழந்தைகள்

இந்த மாநிலத்தின் எர்ணாகுளத்தில் இருந்து கர்நாடக தலைநகர் பெங்களூருக்கு, தெற்கு ரயில்வே சார்பில் புதிதாக வந்தே பாரத் ரயில் நேற்று முன்தினம் அறிமுகம் செய்யப்பட்டது. இதற்காக நடந்த விழாவில் ஆசிரியர்களுடன் கலந்து கொண்டு வந்தே பாரத் ரயிலில் பயணித்த பள்ளிக் குழந்தைகள் மகிழ்ச்சியாக பாடியபடி சென்றனர். இந்த வீடியோவை, தெற்கு ரயில்வே தன் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு பெருமிதம் தெரிவித்திருந்தது.

Continues below advertisement

ஆர்.எஸ்.எஸ் பாடலை பாட அனு மதித்தது யார்?

இந்நிலையில், பள்ளிக் குழந்தைகள் பாடியது ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் பாடல் என்பதால், கேரள அரசு கடும் அதிருப்தி அடைந்துள்ளது. அரசு நிகழ்ச்சியில் RSS ஆர்.எஸ்.எஸ் பாடலை பாட அனு மதித்தது யார் என்பது குறித்து விசாரிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

கேரள கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி வெளியிட்ட அறிக்கை:

அரசு விழாவில், எந்தவொரு குழுவின் மதம் சார்ந்த விஷயத்தை பரப்புவதோ, இதற்காக குழந்தைகளை பயன்படுத்துவதோ அரசியலமைப்பு கொள்கைகளை மீறும் செயல். எனவே, இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு பள்ளிக் கல்வி இயக்குநரகத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணை முடிவுகளின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். நடவடிக்கை நாட்டின் மதசார்பற்ற கொள்கைகள் மற்றும் தேசிய மதிப்புகளை உறுதிசெய்ய வேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது. எனவே, அந்த கொள்கைகளை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பயங்கரவாதத்தை துாண்டும் பாடல் அல்ல

அதே சமயம் வந்தே பாரத் ரயிலில் ஆர்.எஸ்.எஸ்., பாடலைப் பாடியது குற்றமாகாது என, மத்திய அமைச்சரும், பாஜக  எம்.பி.,யுமான சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார். அந்த நேரத்தில் அந்த பாடலைப் பாட வேண்டும் என பள்ளிக் குழந்தைகளுக்கு தோன்றி இருக்கிறது. அதனால் பாடி இருக்கின்றனர். தவிர, அது ஒன்றும் பயங்கரவாதத்தை துாண்டும் பாடல் அல்லவே, என சுரேஷ் கோபி கேள்வி எழுப்பி உள்ளார். கேரள முதல்வர் பினராயி விஜயனும் இந்த சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக வலை தளத்தில் பதிவிட்டார்.

பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம்

சர்ச்சை ஏற்பட்டதை தொடர்ந்து சமூக வலைதளத்தில் இருந்து அந்த வீடியோவை நீக்கிய தெற்கு ரயில்வே, பின்னர் மீண்டும் ஆங்கில மொழிபெயர்ப்புடன் பதிவிட்டுள்ளது.  தேசபக்தி பாடல் பாடுவது குற்றமா? தேசபக்தியை ஊட்டும் பாடலை பள்ளி குழந்தைகள் பாடக்கூடாதா, அப்படி பாடுவது தவறா? என கேள்வி கேட்டு சம்பந்தப்பட்ட பள்ளியின் முதல்வர் டிண்டோ, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது: வந்தே பாரத் ரயிலில், பரமபவித்ர மாதாமீ மண்ணில் பாரதாம்பயே பூஜிக்கான் என்கிற  பாடல் தான் பாடப்பட்டது. எங்களது கேள்வி என்னவெனில், தாய் மண்ணை போற்றும் தேச பக்தி பாடலை நம் பள்ளிக் குழந்தைகள் பாடக்கூடாதா? அதற்கு முட்டுக்கட்டை போடுவது இளைஞர்கள் மனதில் தேசப்பற்று உணர்வை மங்க செய்துவிடும். தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிராகவோ, மதசார்பற்ற கொ ள்கைக்கு எதிராகவோ அந்த பாடலில் ஒரு வார்த்தை கூட கிடையாது. இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.